ஊரடங்கு உத்தரவு மீறல்.. தமிழகத்தில் 2 லட்சம் பேர் கைது.. பறிமுதல் செய்த வாகனங்கள் இன்று முதல் வாபஸ்
சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி, வெளியே சுற்றிய 2 லட்சத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுக்க தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. தமிழகமும் அதை தீவிரமாக பின்பற்றி வருகிறது. இந்த காலகட்டத்தில் அநாவசியமாக யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்பது உத்தரவு.
144 தடையுத்தரவும் அமலில் உள்ளது. அதையும் மீறி வெளியே வந்த 2 லட்சத்து, 8 ஆயிரத்து 139 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதன்பிறகு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
1 லட்சத்து 79 ஆயிரத்து 827 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 1.94 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ரூ.89 லட்சத்து, 23 ஆயிரத்து 644 அபராதம் வசூலிக்கப்பட்டது. தமிழக காவல்துறை இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதேநேரம், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை இன்று முதல் திரும்ப ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.