இந்த சீசனின் முதல் டிப்ரெஷன்.. நாளை சென்னையில் காற்று வீசும்.. அடுத்து என்ன? வெதர்மேன் அப்டேட்
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தமானது இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனுக்கான முதல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி முதல் காற்றழுத்தம் காற்றோடு காற்றாக போய்விட்டது. சரி அடுத்து உருவாகியுள்ள காற்றழுத்தமாவது புயலாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதுவோ வரும் வராது என்ற காமெடி போல் ஆட்டம் காட்டி வருகிறது.
அதாவது காற்றழுத்தத்துடன் வறண்ட காற்று சந்தித்துக் கொண்டதால் புயலாக மாறுவது கடினம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் குறைந்த காற்றழுத்தம் ஆழ்ந்த காற்றழுத்தமாக உருவானது. இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.

இரு நாட்களுக்கு மழை
இதனால் தமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த நிலையிில் இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்துள்ளது.

என்ன ஆகும்
இதுதான் இந்த சீசனின் முதல் காற்றழுத்தம். நாளை மற்றும் நாளை மறுநாள் மேற்கு பகுதியிலிருந்து வரும் மேகங்கள் சென்னை உள்பட வட தமிழகத்தின் மேல் நிலவும். இதனால் மழை பெய்ய வாய்ப்பு ள்ளது. நாளை சென்னையில் நல்ல காற்று வீசும். அது போல் கடலோரத்திற்கு அருகே உள்ள பகுதிகளான திருவள்ளூர், செங்கல்பட்டு பகுதிகளிலும் காற்று வீசும். வறண்ட காற்று பிரச்சினை இல்லை. 20 முதல் 30 முடிச்சுகள் உள்ளதுதான் பிரச்சினை என தெரிவித்துள்ளார்.

நாளையும் மழை
நாளையும் நாளை மறுநாளும் மழை பெய்யும் என்பதால் பள்ளி மாணவர்கள் விடுமுறையை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். கடந்த முறை காற்றழுத்தம் ஏற்பட்ட போது 3 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை கிடைத்தது. அது போல் இந்த முறையும் பள்ளி விடுமுறைக்காக குழந்தைகளும் அவர்களுடைய பெற்றோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். 21, 22 தேதிகளில் நல்ல மழை பெய்யும் என்பதால் விடுமுறை அறிவிக்கப்படும் என தெரிகிறது.

மீனவர்கள்
நேற்று வெதர்மேன் போட்ட பதிவில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் செவ்வாய்க்கிழமை வரை அதி கனமழை பெய்யும். நாளை நாள் முழுவதும் காற்றானது மணிக்கு 30- 40 கி.மீ. வேகத்தில் வீசும். தெற்கு ஆந்திராவிலிருந்து வடதமிழக கடலோர பகுதிகள் வரையிலான கடற்பகுதியில் இன்று, நாளை, நாளை மறுநாள் மீனவர்கள் செல்வது கடினமாக இருக்கும். எனவே இந்திய வானிலை மையம் மற்றும் சென்னை வானிலை மையத்தின் அறிவுரையை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications