"இனி சென்னைக்கு டெய்லி மழை தான்.." ஹேப்பி நியூஸை கொடுத்த தமிழ்நாடு வெதர்மேன்! கடைசியில் ஒரு ட்விஸ்ட்
சென்னை: தலைநகர் சென்னையில் சில இடங்களில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், மதிய நேரமே திடீரென மழை பெய்ய என்ன காரணம், எங்கெல்லாம் மழை இருக்கும் என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்து கடந்த சில நாட்களாகவே சற்று குளிர்ச்சியான வானிலையே நிலவி வருகிறது. கோடையில் ரொம்பவே கஷ்டப்பட்ட சென்னைவாசிகளுக்கு இது சற்று ஆறுதலாக இருக்கிறது.

ஏனென்றால் இந்தாண்டு மட்டும் 18 முறை சென்னையில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸை தாண்டியிருந்தது. அதிலும் குறிப்பாக இந்த மாதம் மட்டும் 15 முறை வெப்பம் 40 டிகிரி செல்சிஸை தொட்டிருந்தது.
சென்னை மழை: இதனால் பள்ளிகள் திறப்பு கூட ஒத்திவைக்கப்பட்டது. இருப்பினும், ஒரே வாரத்தில் நிலைமை தலைகீழாக மாறியது.. கடந்த வாரமே சென்னையில் பல இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் ஒரு சில இடங்களில் நீர் தேங்கினாலும் அவை சில மணி நேரத்தில் வடிந்துவிட்டது. மேலும், சென்னை உட்பட சில மாவட்டங்களில் பள்ளிக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதமே அதீத வெப்பத்திற்கும் விடுமுறை, மழைக்கும் விடுமுறை என்ற ஒரு சூழலே ஏற்பட்டது.
கடந்த சில நாட்களாகவே வெப்பம் குறைந்து வந்த நிலையில், இன்று மதியம் சென்னையில் பல இடங்களில் நல்ல மழை பெய்தது. பல இடங்களில் சற்று நேரம் மட்டுமே மழை பெய்தாலும் கூட அது தீவிர மழையாகவே இருந்தது. இதற்கிடையே சென்னையில் இப்படி திடீரென மழை கொட்டி தீர்க்க காரணம் என்பது குறித்தும் வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்தும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்: இது குறித்து பல்வேறு ட்வீட்களை பதிவிட்டுள்ள அவர், "பிரகாசமான காலை வேலையில் நல்ல சூரிய ஓளியுடன் தொடங்கிய இந்த நாளில், நாம் இப்போது வழக்கமான வெப்பச்சலன இடியுடன் கூடிய மழைக்குத் திரும்பிவிட்டோம். குறுகிய காலத்தில் 20-40 மிமீ அதிக தீவிர மழை பெய்யலாம்.
மத்திய சென்னை நகர பகுதிக்கு நல்ல மழை பெய்துள்ளது. இவை 30-60 நிமிடங்கள் நீடித்தது.. பின்னர் அப்படியே மழை முழுமையாக நின்றுவிட்டது. இது சாதாரண வெப்பச்சலன மழை ஆகும். கடல் காற்றின் நகர்வு காரணமாக அந்த மழை சற்று முன்னதாக இன்று பிற்பகல் 3.00 மணிக்கே ஆரம்பித்துவிட்டது. அதேநேரம் ஈசிஆர், ஓஎம்ஆர் பெல்ட்களில் பெரியளவில் மழை இல்லை.
தீவிர மழை: மழைவீதம் 1-2 நிமிடங்களுக்கு மணிக்கு 230மிமீ என்று உச்சத்தை எட்டியது.. இது மழை எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. நுங்கம்பாக்கத்தில் இதுவரை 30-35 மிமீ மழைப் பதிவாகியுள்ளது.
புயல்காற்று இப்போது கடலில் நகர்ந்து வருகின்றன. தென் சென்னைக்கு கொஞ்சம் மழை கிடைக்கலாம். ஆவடி - ஸ்ரீபெரும்புதூர் பெல்ட் அருகே மேற்குப் பகுதியில் மேலும் கொஞ்சம் மழை பெய்யலாம். மழையை மிஸ் செய்த சென்னைக்கு இதன் மூலம் மழை கிடைக்கும்.
வரும் நாட்கள்: அடுத்த 4 நாட்களுக்குச் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் தினசரி 30 -45 நிமிடங்கள் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். வட சென்னையில் ஒரு நாள், தென் சென்னையில் ஒரு நாள் என்றோ அல்லது ஒட்டுமொத்தமாகச் சென்னை முழுக்கவும் கூட மழை பெய்யலாம். கேரளாவில் வரும் 25ம் தேதி முதல் பருவமழை தொடங்கும்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அதாவது டெய்லி மழை பெய்யும் என்றாலும் கூட அவை 30- 45 நிமிடங்கள் மட்டுமே நீட்டிக்கும் என்பது சென்னைவாசிகளுக்கு சற்று ஏமாற்றம் தான்.












Click it and Unblock the Notifications