கொட்டி தீர்க்கும் வடகிழக்கு பருவமழை! இன்று தமிழகத்திற்கு காத்திருக்கும் மழை! வானிலை மையம் தகவல்
சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், இன்று மாநிலத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே மாநிலத்தில் பரவலான இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் செம மகிழ்ச்சியில் உள்ளனர்.
கனமழை காரணமாக மாநிலத்தில் உள்ள முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகிறது. வரும் நாட்களிலும் இந்த மழை தொடரும் என்றே கணிக்கப்பட்டு உள்ளது.

வானிலை ஆய்வு மையம்
இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நாளை 19ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதற்கடுத்த மூன்று தினங்களில் மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக - புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

இன்று மிதமான மழை
இதனால் இன்று (18.11.2022) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை (19.11.2022) கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்கள்
குறிப்பாக நாளை மறுநாள் கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரங்களில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகள், மத்தியகிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்ற அறிவுறுத்தப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications