அந்தமான் அருகே காற்றழுத்தம்.. ஏற்றப்பட்டது 1ம் எண் புயல் கூண்டு.. தமிழகத்தில் ஜில் ஜில் மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு நிலை நிலவும் நிலையில், தூத்துக்குடி முதல் எண்ணூர் வரை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கோடை வெயில் உச்சத்தை தொட்டு கொண்டிருக்கிறது. சென்னை உட்பட தமிழகம் முழுக்க வெப்பநிலை படிப்படியாக உயர்ந்து கொண்டிருக்கிறது.
நேற்று மட்டும், தமிழகத்தில் 10 நகரங்களில் 100 ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி சுட்டெரித்தது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை
இந்த நிலையில்தான், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இதன் காரணமாக தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
புயல் கூண்டு ஏற்றம்
தற்போதைய நிலவரப்படி அந்தமான் அருகே 420 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலை கொண்டிருக்கிறது. இது வலுவிழந்து செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றபோதிலும் முன்னெச்சரிக்கையாக, நாகை, காரைக்கால் , தூத்துக்குடி, எண்ணூர் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மழை பெய்யும்
காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகத்தை நோக்கி நெருங்கி வரும் போது வெயிலின் தாக்கம் குறைந்து ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
27 மாவட்டங்களில் வெப்பம்
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் இயல்பை விட 4 முதல் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் மழை பெய்தால் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படும் என்பது மட்டும் உறுதி.