டாஸ்மாக் சரவெடி.. மதுக்கடையில் பணம் இப்படித்தான் செலுத்தணுமா? சென்னையில் "தள்ளாடும்" டிஜிட்டல்..?
சென்னை: மதுக்கடைகள் குறித்து 2 விதமான கோரிக்கைகள் தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளன.. இந்த கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால், மதுபாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிப்பதை தடுக்க உதவும் என்றும் மதுப்பிரியர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மதுக்கடை ஊழியர்கள், அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையைவிட பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளது.. எனவே, விற்பனையை, தொகையை குறைத்து காட்டுவது போன்ற முறைகேடும், கொள்ளை சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன..

கருவிகள்: அதனால்தான், இதற்கெல்லாம் ஒருமுடிவு கட்டவே, டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகரம், நகரம் உள்ளிட்ட இடங்களிலுள்ள, 2,000க்கும் மேற்பட்ட மதுக்கடைகளுக்கு, தனியார் துறை வங்கி வாயிலாக, கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில், பாயின்ட் ஆப் சேல் கருவிகள் வழங்கப்பட்டன.
அதில், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி, 'ஸ்வைப் செய்து பணம் செலுத்தலாம் என்றும், இந்த முறையினால், கூடுதல் பணம் வசூலிக்க முடியாது என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆனாலும், பல கடைகளில் டிஜிட்டலுக்கு பதில் இதுவரை, ரொக்கமாகவே ஊழியர்கள் பணம் வசூலித்து வருகிறார்களாம்.. மேலும், பல கருவிகள் பயன்படுத்தப்படாமல் சேதம்அடைந்துள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தன..
டெண்டர்: இதற்கு பிறகு, 4,810 மதுக்கடைகளுக்கும், பாயின்ட் ஆப் சேல் கருவிகளை புதிதாக வாங்கி டிஜிட்டல் முறையில் பணம் வசூலிக்கும் ஒப்பந்த பணிக்கு, டாஸ்மாக் டெண்டர் கோரியிருப்பதாக சொன்னார்கள்.
இதில் காஞ்சிபுரம் மாவட்டத்தை எடுத்துக்கொண்டால், காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட எல்லையில் உள்ள 132 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில் வாங்குபவர்களிடம் Paytm கியூஆர் கோடு மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனனை முறையில் பணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு மதுப்பிரியர்கள், பலத்த வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள்.
பண பரிவர்த்தனை: இதேபோல் சென்னையில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.. ஆனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில் சுமார் 1000 டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும்நிலையில், இதில் பல கடைகளில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை வசதி இல்லையாம்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பதாகவும், இதற்கு தீர்வு காண அனைத்து டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதி ஏற்படுத்த வேண்டும் என்றும் மதுப்பிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
மதுபாட்டில்கள்: அதாவது, சென்னையில் பல கடைகளில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறை இருந்தும், அதை நடைமுறைப்படுத்தவில்லையாம்..
அதனால், மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டுமானால், சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பது தொடர்பாக அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றும் மற்றொரு வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications