இந்திக்கு மாறிய வலைதளம்! வெடித்து கிளம்பிய சர்ச்சை.. என்ன நடந்தது? எல்ஐசி நிறுவனம் கொடுத்த விளக்கம்
சென்னை: மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இன்று இந்திக்கு (Default) மாற்றப்பட்டு இருந்தது. இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நடந்ததாகவும், தற்போது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டதாக எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது.
எல்.ஐ.சி எனப்படும் ஆயுள் காப்பீட்டு கழகம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனம் ஆகும். இன்சூரன்ஸ் என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது எல்.ஐ.சி தான் என சொல்லும் அளவுக்கு மக்கள் மத்தியில் மிகவும் பரிட்சயமான ஒரு பொதுத்துறை நிறுவனமாக எல்.ஐ.சி உள்ளது.

மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. பாதுகாப்பு முதலீடாக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் சிறந்த முதலீட்டு நிறுவனமாகவும் எல்.ஐ.சி உள்ளது. நாடு முழுக்க பல கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது.
இந்த நிலையில், LIC வலைத்தள பக்கம் முழுவதுமாய் இந்திக்கு (Default) மாற்றப்பட்டு இருந்தது. अंग्रेज़ी என்பதை அழுத்தினால் மட்டுமே LIC பக்கம் ஆங்கிலத்துக்கு மாறும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. இது இந்தி தெரியாத மக்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏற்கனவே மத்திய அரசு பல்வேறு வழிகளில் இந்தி திணிப்பை செய்வதாக தென் இந்திய மாநிலங்களில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில், மத்திய அரசின் பொதுத்துறை நிறுவன இணையதளத்தில், இந்தி டிஃபால்ட் மொழியாக மாற்றப்பட்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
தமிழக முதல்வர் முக ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இந்த நிலையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டதாக எல்ஐசி விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக எல்ஐசி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எல்ஐசி நிறுவன இணையதளத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழி தெரியும்படி மாறிவிட்டது. தற்போது ஆங்கிலம், இந்தி மொழிகளில் வரும் வகையில் இணையதளம் சரி செய்யப்பட்டது. இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இப்படி நிகழ்ந்துவிட்டது. தற்போது இந்த கோளாறு சரி செய்யப்பட்டு விட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தி மொழி மட்டுமே இணையதளத்தில் இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications