தாம்பரத்தில் இன்று முதல் நின்று செல்லும் சென்னை-மதுரை தேஜஸ் ரயில்.. நேரம் என்ன தெரியுமா? முழுவிபரம்
2019ம் ஆண்டு முதல் சென்னை-மதுரை இடையே அதிவேக தேஜஸ் ரயில் இயங்கி வருகிறது.
சென்னை: சென்னை-மதுரை இடையே அதிவேக தேஜஸ் ரயில் இயங்கி வருகிறது. இந்த ரயில் தாம்பரத்தில் நிற்காமல் சென்று வந்தது. இதையடுத்து தாம்பரத்தில் ரயில் நின்று செல்ல வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். இதனை மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று முதல் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் இன்று செல்ல தொடங்கி உள்ளது. இந்த ரயில் தாம்பரம் வந்து செல்லும் நேரம் என்ன என்பது பற்றிய விபரமும் வெளியாகி உள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்கு அதிவேகமாக இயங்கும் வகையில் தேஜஸ் ரயில் சென்று வருகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் இந்த ரயில் பயன்பாட்டில் உள்ளது. வாரத்தில் வியாழக்கிழமையை தவிர்த்து பிற அனைத்து நாட்களிலும் இயங்கும் இந்த ரயில் சென்னை - மதுரை இடையேயான இந்த ரயிலின் பயண நேரம் என்பது 6 மணிநேரமாக உள்ளது.
அதன்படி வாரந்தோறும் வியாழக்கிழமை தவிர்த்து காலை 6 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு தேஜஸ் ரயில் (22671) மதியம் 12.15 மணிக்கு மதுரை செல்லும். மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு சென்னை எழும்பூரை அடையும்.

2 ரயில் நிலையங்களில் மட்டுமே
அதிநவீன சொகுசு வசதிகள் இருப்பதோடு, பயண நேரமும் குறைவு என்பதால் இந்த ரயிலை ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இருப்பினும் கூட அவ்வப்போது ரயிலில் முழு இருக்கைகள் நிரம்புவது இல்லை என்ற குற்றச்சாட்டும் இருந்தது வருகிறது. இதற்கு முக்கிய காரணம் என்பது தேஜஸ் ரயில் சென்னை-மதுரை இடையே புறப்படும் இந்த ரயில் திருச்சி சந்திப்பில், திண்டுக்கல் என 2 ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்வது தான் காரணம் என தெரிவித்தனர்.

தாம்பரத்தில் நின்று செல்ல அனுமதி
இதற்கிடையே தான் தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்ல வேண்டும். இதன்மூலம் தென்மாநில மக்கள் அதிகமாக பயனடைவார்கள் என நீண்டகாலமாக கோரிக்கைகள் இருந்து வந்தது. இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. அதாவது சென்னை - மதுரை இடையேயான தேஜஸ் ரயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என மத்திய ரயில்வே அமைச்சகம் தெரிவித்தது.

விழாவில் டிஆர் பாலு
அதன்படி சென்னையில் இருந்து இன்று காலை புறப்பட்ட தேஜஸ் ரயில் தாம்பரம் ரயில் நிலையத்தில் வந்து நின்றது. இதையடுத்து அங்கு விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் மத்திய அமைச்சர் எல் முருகன், திமுக எம்பி டி ஆர் பாலு உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தாம்பரம் வந்து நின்ற ரயிலில் பயணிகள் ஏறியவுடன் பச்சை கொடியசைத்து அங்கிருந்து ரயிலை இருவரும் அனுப்பி வைத்தனர்.

ரயில் வரும் நேரம் என்ன?
அதன்படி இனி தாம்பரம் ரயில் நிலையத்தில் காலை 6.25 மணிக்கு வரும் தேஜஸ் ரயில் 2 நிமிடம் நின்று காலை 6.27 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு செல்லும். இரவு 9.38 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் வரும் ரயில் 9.40 மணிக்கு புறப்பட்டு செல்லும் என தெற்கு ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications