பாஜக தேர்தல் வியூக கலந்துரையாடலில் பங்கேற்ற தெலுங்கானா ஆளுநர் தமிழிசை.. வெடிக்கும் சர்ச்சை!
சென்னை : பாஜகவினர், தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக நடத்திய ட்விட்டர் கலந்துரையாடலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தொடர்ச்சியாக, பாஜகவுக்கு எதிரான கட்சிகளைப் பற்றி விமர்சித்துப் பேசி வருகிறார்.
அரசியலமைப்புச் சட்ட பதவியான ஆளுநர் பொறுப்பை வகிப்பவர், கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டும் என்ற மரபை மீறி தமிழிசை செயல்படுவதாக அவ்வப்போது சர்ச்சைகள் கிளம்புவது வழக்கம்.
இந்நிலையில், பாஜகவினர் நடத்திட ட்விட்டர் ஸ்பேசஸ் மீட்டிங்கில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்றது விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது.

ஆளுநர்கள் அரசியல்
மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, பல்வேறு மாநிலங்களிலும் ஆளுநர்கள் மாற்றப்பட்டனர். பாஜக ஆட்சி புரியாத மாநிலங்களின் ஆளுநர்கள், அரசுக்கு பல்வேறு வகையில் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். புதுச்சேரி, மேற்கு வங்கம், தமிழ்நாடு என பல மாநிலங்களில் ஆளுநர்களின் தலையீட்டால் அந்தந்த மாநில முதல்வர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர். தன்னிச்சையாக கூட்டம் நடத்துவது, பாஜக ஆதரவு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது போன்ற நடவடிக்கைகளில் ஆளுநர்கள் ஈடுபடுவது விமர்சிக்கப்பட்டு வருகிறது.

அரசியலமைப்பு பதவி
அரசியலமைப்புச் சட்ட பதவியை வகிக்கும் ஆளுநர்கள், கட்சி சார்பு கொண்டவராகச் செயல்படக்கூடாது என்பது சட்டம் வழங்கும் விதி. எனினும், இன்றைக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அரசின் நிர்வாகத் தலைவர்களான ஆளுநர்கள் பாஜகவின் பிரதிநிதிகளாகவே செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. பாஜக கட்சியினரைப் போலவே ஆளுநர்கள் பேசி வருவது கண்டனங்களைச் சந்தித்து வருகிறது.

ட்விட்டர் ஸ்பேசஸ்
இந்நிலையில், தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், புதிதாக ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ட்விட்டர் ஸ்பேசசில், பாஜகவினர், 2024 தேர்தலில் தென்னிந்தியாவுக்கான பாஜகவின் வியூகம் பற்றி ஒரு கலந்துரையாடலை நடத்தினர். இந்த ட்விட்டர் ஸ்பேசஸ் கலந்துரையாடலில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் பங்கேற்றுள்ளார்.

பாஜக கலந்துரையாடலில் ஆளுநர் தமிழிசை
இது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. கட்சி சார்பின்றிச் செயல்பட வேண்டிய ஆளுநர், பாஜக தேர்தல் வியூக கலந்துரையாடலில் பங்கேற்று பாஜக ஏஜெண்ட் போல செயல்படுவதா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருபக்கம் தெலுங்கானா மாநில அரசு நிறைவேற்றிய மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு, இன்னொரு பக்கம் பாஜக நிகழ்ச்சிகளில் ஆளுநர் பிஸியாக இருக்கிறார் என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் பதவியின் கண்ணியத்துக்கு அழகா?
ஆளுநர்கள் தங்கள் பதவிக் காலத்தில் எந்தவொரு அரசியல் கட்சியிலும் இருக்கக்கூடாது என்பது விதி. அதற்காகவே, கட்சி சார்புள்ளவர்கள் ஆளுநராக பதவியேற்கும் முன், கட்சி உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பதவியிலிருந்தும் விலகுவது வழக்கம். அப்படி இருக்கும்போது, ஆளுநரான பிறகும் பாஜக தலைவர் போல, பாஜக நடத்தும் கூட்டங்களில் பங்கேற்பது ஆளுநருக்கு அழகா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications