தமிழகத்தில் தகிக்கும் வெப்பம் - சேலத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் - இன்னும் சுட்டெரிக்கும்
தமிழகத்தில் அனல் காற்று வீசத் தொடங்கியுள்ளது. சேலம் உள்ளிட்ட பல நகரங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.
சென்னை: பங்குனி மாதத்தில் வெயில் பட்டையை கிளப்பி வருகிறது. அக்னி நட்சத்திர காலத்திற்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் இப்போதே அனல் காற்று வீசத் தொடங்கி விட்டது. நேற்று பல நகரங்களில் 104 டிகிரிக்கும் மேலாக வெப்பநிலை பதிவாகியுள்ளது.
Recommended Video

கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வடகிழக்குப் பருவமழையும் நன்றாக பெய்தது. நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. தை மாதம் வரைக்கும் மழை கொட்டித்தீர்த்தது. குளுமையான காலநிலை நிலவி வந்த நிலையில் பங்குனி பிறந்தது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
நடப்பாண்டு வெப்பநிலை சராசரி அளவை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. அதுபோலவே பல மாநிலங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக கொடைக்கானலில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சுட்டெரித்த வெப்பம்
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலத்தில் 39.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 104 டிகிரி பரான்ஹீட் ஆகும். சேலத்தைத் தொடர்ந்து, கரூர் பரமத்தி பகுதியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவானது.

தகிக்கும் சூரியன்
வேலூர், திருச்சியில் 37.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. மதுரையில் 37.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் தருமபுரியில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

குறைந்த பட்ச வெப்பநிலை
அதேபோல குறைந்த பட்ச வெப்பநிலையாக கொடைக்கானலில் 11 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. கொடைக்கானலைத் தொடர்ந்து உதகமண்டலத்தில் 11.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குன்னூரில் 14.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது.

அதிகரிக்கும் வெப்பம்
ஏப்ரல் 2ஆம் தேதியன்று தரைக்காற்று வடமேற்கு திசையில் இருந்து தமிழக பகுதி நோக்கி வீசும் சாத்தியக்கூறுகள் உள்ளதால் சென்னை, காஞ்சிபுரம் செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் அதிக பட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகம் பதிவாகக்கூடும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

தவிக்கும் மக்கள்
புதுச்சேரி, காரைக்கால் நகரங்களிலும் 3டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயரக்கூடும் என வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பவே இப்படி சுடுதே அக்னி நட்சத்திர காலம் எப்படி இருக்குமோ என்று மக்கள் வெயிலின் புழுக்கத்தை தாங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.











Click it and Unblock the Notifications