லீஸூக்கு வீடுகள்.. வாடகை வீட்டில் குடியிருப்போர் "இந்த" விஷயத்தை விட்றாதீங்க.. துணையிருக்குது சட்டம்
சென்னை: 10 வருடம் ஒரு வீட்டில் குடியிருந்தால், அந்த வீடு வாடகைதாரருக்கு சொந்தமாகிவிடுமா? வாடகைதாரருக்கும் சட்டம் உள்ளதா? அந்த சட்டம் என்ன சொல்கிறது? ஆனால் அது சரியா?
வாடகை வீடு என்றாலும்கூட, இதற்கும் சில சட்டங்கள் உள்ளன.. சில உரிமைகளும் உள்ளன. இவைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அப்படியானால், வாடகைதாரர்களும் சரி, வீட்டு ஓனர்களும் சரி, எந்தெந்த பிரச்சனை ஏற்பட்டால், கோர்ட்டில் முறையிடலாம் தெரியுமா?
முக்கியமாக, வாடகைதாரரும், வீட்டு ஓனரும் முதலில் ஒப்பந்தப் பத்திரம் எழுதிக்கொள்வதுடன், வாடகை, பராமரிப்பு, கரண்ட் பில், அட்வான்ஸ் என அந்த பத்திரத்தில் தெளிவாக குறிப்பிட்டு கொள்ள வேண்டும்.. வீட்டுக்கு பெயிண்ட் அடிப்பது, வாடகைக் கட்டணத்தை உயர்த்துவது குறித்தெல்லாம் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் பிரச்சனையே இல்லை..

20 ரூபாய் முத்திரைத்தாளில் அங்கீகரிக்கப்பட்ட முத்திரை விற்பனையாளரிடம் வாங்கி, வாடகைதாரர் - உரிமையாளர் இருவருமே பத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டும்.. 11 மாதத்திற்கு ஒருமுறை மறக்காமல் அதை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.. ஆனால், 11 மாத காலத்திற்கு மேற்பட்ட பத்திரப்பதிவுகளை, பத்திர ஆபீசில்தான் பதிவு செய்ய வேண்டும்..
உறவினர்கள்: ஒப்பந்தம் முடிந்தும் அடுத்ததாக எந்த ஒரு ஒப்பந்தமும் போடவில்லை என்றாலும், வாடகைக்கு குடியிருப்பவர் தொடர்ந்து 6 மாதம் அந்த வீட்டில் குடியிருக்கலாம். அதேபோல வாடகை ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டவர் துரதிர்ஷ்டவசமாக இறந்துபோகும் சமயத்தில், ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள உறவினர்கள் யாராவது இருந்தால் அவர்கள் ஒப்பந்தம் முடியும் வரை அந்த வீட்டில் தங்கிக்கொள்ளலாம்.
அதேசமயம், ஏதாவது இடையூறு இருந்தால், வாடகைதாரர் அல்லது வீட்டு ஓனர் இவர்களில் யார் வேண்டுமானாலும் கோர்ட்டுக்கு சென்று முறையிடலாம். எந்தெந்த விஷயத்துக்கு கோர்ட்டுக்கு செல்லலாம் தெரியுமா?
ஒருவேளை, வீட்டு ஓனர் திடீரென வாடகையை உயர்த்திவிட்டால், அந்த வாடகை உயர்வில் வாடகைதாரருக்கு விருப்பம் இல்லையென்றால், கோர்ட்டில் சென்று முறையிடலாம். அதேபோல, வீட்டு ஓனரும், வாடகைக் கட்டணம் உயர்த்தும்போது வாடகைதாரர் ஒத்துக்கொள்ளாதபட்சத்தில், கோர்ட்டுக்கு சென்று முறையிடலாம். ஆனால், எதற்காக வீட்டு வாடகை உயர்த்தப்படுகிறது என்ற காரணத்தை ஓனர் கோர்ட்டில் தெளிவாக சொல்ல வேண்டும்.
வாடகை வீடு: அதேபோல, வாடகை வீட்டில் ஒருவர் 100 வருடமே வசித்தாலும் அந்த வீட்டை உரிமை கோரச்சட்டத்தில் வழிமுறை இல்லை. ஆனால் 12 வருடங்களாக வாடகைக் கட்டணம் ஏதும் செலுத்தாமல் வாடகைதாரர் இருக்கும்பட்சத்தில் அந்த வீட்டிற்கு உரிமை கோர, சட்டத்தில் வழியிருக்கிறது. சுருக்கமாக சொன்னால், மாதந்தோறும் வாடகையை தந்துவிட்டு, குடியிருப்பவர்களில் எத்தனை வருடங்களானாலும் வீட்டை உரிமைகோர முடியாது என்பதை மறந்துவிடக்கூடாது..
அதேபோல, வாடகைதாரர் அதிகமான வாடகைக்கு குடிவந்துவிட்டபிறகு, ஒருவேளை அந்த கட்டணம் அதிகம் என்று நினைத்தால், அப்போதும் கோர்ட்டை நாடலாம்.. உதாரணமாக, ஒரு வீட்டுக்கு 8 ஆயிரம் வாடகைக்கு ஒருவர் குடிவருகிறார் என்றால், அந்த வீட்டுக்கு அருகில் உள்ள வீட்டு வாடகைக் கட்டணங்கள் மிக குறைவாக இருக்கிறதென்றால், வாடகைதாரர் கோர்ட்டுக்கு போகலாம்.
வீட்டு ஓனர்கள்: ஹவுஸ் ஓனர் திடீரென வீட்டை காலி செய்ய சொல்வது, தண்ணீர், கரண்ட் போன்ற அத்தியாவசியமான தேவைகளை நிறுத்திவிடுவது, இப்படியெல்லாம் தொந்தரவுகள் தந்தால், வாடகைதாரர் உரிமையியல் கோர்ட்டில் சென்று முறையிடலாம்..
இதுபோன்ற வழக்குகள் எல்லாம் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அப்போதே தீர்வும் காணப்படும்.. அதேபோல, வாடகை சம்பந்தப்பட்ட வழக்குகளுக்கு வெளியூர்களில் இருப்பவர்களும், மாவட்ட உரிமையியல் கோர்ட்டை அணுகலாம். சென்னைவாசிகளாக இருந்தால், ஹைகோர்ட் வளாகத்தில் அமைந்திருக்கும் சிறுவழக்குகள் நீதிமன்றத்தை அணுகலாம்.
ஜாக்கிரதை: அதேசமயம், சில போலி புரோக்கர்கள் சென்னையின் புறநகரை வட்டமிடுவதால், இவர்களிடம் வாடகைக்கு வீடு தேடுவோர் எச்சரிக்கையாக இருக்க வேண்டி உள்ளது..
வாடகை வீடுகளில் என்றில்லை, லீசுக்கு வீடு இருப்பதாக சொல்லியும் பல கும்பல்கள் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், தாம்பரம், சிட்லப்பாக்கம், கூடுவாஞ்சேரி, வண்டலூர், போன்ற இடங்களில் வீடு லீஸூக்கு இருப்பதாக சொல்லி, ஆன்லைனில், "அட்வான்ஸ் கமிஷன்" தொகையை லட்சக்கணக்கில் வாங்கி மோசடி செய்த சம்பவங்கள் 2 மாதங்களுக்கு முன்பு நடந்தன.
கவர்ச்சி விளம்பரங்கள்: சில புரோக்கர்கள், கவர்ச்சிகரமான விளம்பரத்தையும் ஆன்லைனில் செய்துவிடுவதால், அவசரத்துக்கு லீஸூக்கு வீடு தேடுவோர், புரோக்கர்கள் கேட்கும் அட்வான்ஸ் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிடுகிறார்களாம். அதனால், ஆன்லைன் புரோக்கர்களிடம் சற்று எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications