தை பொங்கல் கொண்டாட சொந்த ஊர் போறீங்களா? அரசு பேருந்துகளில் ரிசர்வேசன் பண்ணலாம்
பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு இன்று முதல் அரசு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியுள்ளது. அரசு பேருந்தில் செல்ல www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு தொடங்குகிறது.
சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்பவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என அரசு பேருந்து போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. அரசு பேருந்தில் செல்ல www.tnstc.in இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம்.

ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை பொங்கல் பண்டிகை சிறப்பு விடுமுறை வருகிறது. இதையொட்டி பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட திட்டமிடுவார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் பொங்கலை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கியிருப்பதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட அரசு விரைவு பேருந்துகளில் 30 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்ல டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கி விட்டனர்.
தமிழகத்தில் 300 கி.மீ தூரத்துக்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சொகுசு மற்றும் ஏசி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், கோவை, திருப்பூர், சேலம், திருப்பதி, பெங்களூரு, கும்பகோணம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 1200-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
அரசு பேருந்துகளில் பயணம் செய்ய 60 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அடுத்தமாதம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.www.tnstc.in இணையதளம் மட்டுமல்லாமல், www.redbus.in. www.busindia.com, www.makemytrip.com ஆகிய இணையதளங்கள் வழியாகவும் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். ஜனவரி11 முதல் 20ம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்குவதற்கான அறிவிப்பு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பயணிகளின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பாக விரைவில் ஆலோசனை கூட்டம் நடைபெறும். அதில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு ஏற்ப அடுத்தகட்டமாக நடவடிக்கைகள் இருக்கும். சிறப்பு பேருந்துகள் குறித்து ஜனவரி முதல் வாரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகக்கூடும் என்று தெரிவித்தனர்.
தனியார் இணையதளங்கள் மூலமும் பொங்கல் சிறப்பு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த சூழலில் பல்வேறு மொபைல் ஆப்கள் மற்றும் இணையதளங்கள் டிக்கெட் முன்பதிவில் சிறப்பு தள்ளுபடி அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளன. எனவே இதனை பொதுமக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications