வேலை நேர அதிகரிப்பு மசோதா! மறுபரிசீலனை செய்ய வேண்டும்! அரசின் கதவை வலுவாக தட்டும் அரசியல் கட்சிகள்!
சென்னை: வேலை நேர அதிகரிப்பு மசோதாவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என அரசியல் கட்சிகளின் கோரிக்கைகள் வலுப்பெற்று வருகின்றன.
அந்த வகையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி விடுத்துள்ள பதிவில், தொழிலாளர் விஷயம் என்பதால் அவர்களின் உணர்வுகளை புரிந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இந்த மசோதா தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக அரசு பணி நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்திடும் சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இது கடுமையான எதிர்ப்பை பரவலாக உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது.
பாஜக ஆளும் மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டப்போதும், 2020 ஆம் ஆண்டு இதே சட்டத்தை அதிமுக அரசு நிறைவேற்ற வந்தபோதும், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக ஆற்றல்களும் ஒரு சேர எதிர்த்ததை நாம் வரவேற்றோம்.
தற்போது அது போன்ற தவறை திமுக அரசு செய்து பழிச்சொல்லுக்கு ஆளாகி விடக்கூடாது என கருதுகிறோம். கால சூழலுற்கேற்ற நெகிழ்வுத்தன்மை என அரசு கூறியிருந்தாலும், அதை தொழிலாளர் சமூகம் எதிர்க்கிறார்கள் எனும்போது அதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
அண்ணா, கலைஞர் போன்ற முதுபெரும் அரசியல் ஆளுமைகளை முன்மாதிரியாக கொண்ட 'திராவிட மாடல் 'அரசு இவ்விஷயத்தில் தொழிலாளர் உணர்வுகளை புரிந்துக்கொண்டு இம்மசோதாவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.












Click it and Unblock the Notifications