முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலை! கடலூரில் தமிமுன் அன்சாரியுடன் கரம் கோர்த்த வேல்முருகன்!
சென்னை: முஸ்லீம் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையை வலியுறுத்தி கடலூரில் மஜக நடத்திய போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.
20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகள் அனைவரையும் சாதி, மத, வழக்கு பேதமின்றி முன் விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கோவை, சென்னை, நெல்லையை தொடர்ந்து கடலூரில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட்டது.

இப்போராட்டத்தை தொடங்கி வைக்க வந்த வேல்முருகன், கடந்த சட்டசபை தேர்தலில் சீட் உட்பட எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் திமுக கூட்டணியை ஆதரித்தவர் தமிமுன் அன்சாரி என்றும் அவரது கோரிக்கையை முதல்வர் பரிசீலிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அவரை தொடர்ந்து பேசிய தமிமுன் அன்சாரி, ஆதிநாதன் ஆணையம் என்னவானது என்றும் ஆயுள் சிறைவாசிகள் முன் விடுதலையில் பாரபட்சம் வேண்டாம் எனவும் முழங்கினார்.
இதனிடையே கடலூர் மத்திய சிறையை நோக்கி சென்ற தமிமுன் அன்சாரி உட்பட மாஜக தொண்டர்கள், நிர்வாகிகளை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி திரும்பிச் செல்லக் கூறினர். அப்போது மஜக நிர்வாகிகள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டக் களத்திலிருந்து திரும்பிச் செல்லமாட்டோம் எனக் கூறியதால் தமிமுன் அன்சாரி உட்பட மஜகவினரை கைது செய்து பிறகு விடுவித்தனர். இதனிடையே அடுத்ததாக திருச்சி, மதுரை மற்றும் சேலத்தில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்தவுள்ளார் தமிமுன் அன்சாரி.












Click it and Unblock the Notifications