அம்மாவை தொலைபேசியில் அழைக்கிறேன்.. ஆனால் அழைப்பை ஏற்காத இடத்தில் அவர்.. தமிழச்சியின் உருக்கமான பதிவு
சென்னை: திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியனின் தாயின் பிறந்தநாளையொட்டி அவரது சமாதியில் நின்று உருக்கமாக எழுதிய கவிதையை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழச்சி தங்கபாண்டியன் ஒரு கவிஞர், சமூக ஆர்வலர். இவர் திமுக சார்பில் தென் சென்னை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்பியாக உள்ளார். இவரது தந்தை தங்கப்பாண்டியன் முன்னாள் அமைச்சராவார். இவரது தாய் ராஜாமணி அம்மாள். இவரது சகோதரர் தற்போதைய அமைச்சராக உள்ள தங்கம் தென்னரசு
இந்த நிலையில் உடல்நலக் குறைவால் ராஜாமணி கடந்த 2020 ஆம் ஆண்டு காலமாகிவிட்டார். இந்த நிலையில் தனது தாய் ராஜாமணியின் பிறந்தநாளான இன்று தமிழச்சி தங்கபாண்டியன் அவரது சமாதியில் வழிபட்டுவிட்டு உருக்கமாக கவிதை எழுதியுள்ளார்.

தமிழச்சி தங்கபாண்டியன்
இதுகுறித்து தமிழச்சி தங்கபாண்டியன் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக கூறுகையில் அம்மாவின் தொலைபேசி எண்ணை அழுத்துகிறேன். அழைப்பை ஏற்க இயலாத இடத்தில் அவளிருப்பதை பதிவுக் குரல் உறுதி செய்கையில் தவறவிட்ட அழைப்புகளை எப்படிப் பார்ப்பதெனஅவளுக்குச் சொல்லித் தந்த பின்னிரவு

சன்னக்குரலில் குழந்தமை
அவளது சன்னக்குரலின் குழந்தமையுடன்.
அலுவலில், அவசர அரைச்சலில், சோம்பலில் என நான் தவற விட்ட அவளது அழைப்புகளை அறிந்த தொலைபேசியின் மௌனக் குரல் என் குற்றவுணர்வின் செதில் பிளக்கிறது.
காத்திருக்க ஆளில்லாத வீட்டின் நாற்காலியும் பரிமாறும் கரங்களற்ற உணவு மேசையும் இயக்கப்படாத தொலைக்காட்சிப் பெட்டியும் நிதானித்து நடக்கின்ற பாதம் தொடாத் தரையும் அவளின் இல்லாமையில் விக்கித்திருக்கின்றன.

வரித்து வளர்த்தெடுத்த தாய்
ஐம்புலன்களிலும் என்னை வரித்து வளர்த்தெடுத்த அவளின் அண்மையற்ற நிர்கதியின் சுடுமணலில் புரண்டு என் அழுகை வெடிக்கின்றது. கண்கலங்கப் பொறுக்காத பதைபதைப்பின் தாய்மடி தேடிய முகத்தை மூடும் அவளின் கரிசல் மண் கவுச்சிச் சேலைக்கு விலையேது?

தவறவிட்ட அழைப்புகள்
ஏற்கவே இயலாத அவளின் தொலைபேசி எண்ணிற்கு மறுபடி அழைக்கிறேன். தவறவிட்ட அழைப்புக்களை அம்மா ஒருபோதும் மறந்ததில்லை. பிறந்த_நாள்_வாழ்த்துகள்_அம்மா என்று தனது தாயின் பிறந்தநாளில் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் கவிதை வடித்துள்ளார். இது தாய் இல்லாத பெரும்பாலானோரின் உள்ளங்களையும் உணர்வுகளையும் அப்படியே பிரதிபலிக்கிறது என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளார்கள்.
|
நெட்டிசன்கள் ஆறுதல்
மேலும் பலர் அம்மா எப்போதும் உங்களுடன்தான் இருப்பார். வருந்தாதீர்கள் அக்கா என்றும் அவர் உருவமாக உங்களுடன் இல்லாவிட்டாலும் உங்களுடன் உணர்வுகளில் இரண்டற கலந்திருப்பார், தாயின் இழப்பு, ஈடு செய்ய இயலாத பேரிழப்பு. நானும் அந்த வலியையும் வெறுமையையும் உணர்ந்திருக்கிறேன். காலம் ஆற்றும் சகோதரி...! என்றும் பலர் தமிழச்சிக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.











Click it and Unblock the Notifications