கொரோனாவுக்கு லாக்டவுன் மட்டும் தீர்வல்ல... ராகுல் கருத்துக்கு வேல்முருகன் வரவேற்பு
சென்னை: கொரோனாவுக்கு லாக்டவுன் மட்டுமே தீர்வல்ல என ராகுல்காந்தி தெரிவித்த கருத்தை வரவேற்பதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு பிரதமர் மோடி என்ன வாழ்வாதாரம் ஏற்படுத்தி தரப்போகிறார் எனவும் அவர் வினவியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

அறியாமை
மோடியே கொரோனாவுக்கு எதிராக என்ன செய்ய வேண்டும் என்பதை மாநிலங்களுக்கு உத்தரவிடுகிறார். இதில் கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா போன்ற ஒருசில மாநிலங்கள்தான் விதிவிலக்கே தவிர, மற்றபடி தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களும் மோடியின் சொல்படிதான் செயல்படுவதாகவே இருக்கின்றன. காரணம் அரசியல் அறியாமைதான்.

கால அவகாசம் இல்லை
பல்வேறு மொழிவழி தேசிய இனங்கள் தேர்வு செய்யும் ஒன்றிய அரசுதான் இந்திய அரசு. ஆனால் அந்த ஒன்றிய அரசுக்கோ தான் சுயம்பு என்பதாக நினைப்பு. அதனால் தன்னை உருவாக்கிய மாநிலங்களையே கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. சற்று யோசியுங்கள் போதும்! முதலில் நாலே மணி நேர இடைவெளியில், அதுவும் இரவு தூங்கப்போகும் நேரத்தில் பார்த்து 144-ஊரடங்கை அறிவித்தார் மோடி. எந்தவித முன்னேற்பாட்டுக்கும் வழி இல்லாததால் பாதிக்கும் மேல் இந்திய மக்கள் பட்ட பாட்டை எத்தனை தடவை சொல்வது?

ஏழை எளியோர்
வீட்டுக்குள்ளேயே முடங்குவதால் உணவுக்கு வழியில்லாத மக்களுக்கு அதற்கான ஏற்பாட்டையும் அறிவிக்கவில்லை. ஏழைபாளைகள், அடித்தட்டு மக்கள், அன்றாடங்காய்ச்சிகள், வீடு-வேலை அற்றவர்கள் ஆகிய இவர்களே 60 விழுக்காடு இந்தியா எனும் உணர்வு இல்லாததே காரணம்.

த.வா.க. வரவேற்பு
ராகுல் காந்தி, ஊரடங்கை நீட்டிப்பதால் மட்டுமே பயனில்லை என்பதோடு, மாநிலங்களுக்கான நிதியை விரைந்து வழங்கச் சொல்வதில் பொருள் இருக்கிறது, பொருள் புதைந்தும் இருக்கிறது. நிதியை விரைந்து வழங்க வேண்டும் என்றால், கொரோனாவுக்கான கருவிகள், மருந்துகளை மத்திய அரசல்ல, மாநிலங்களே வாங்கிக்கொள்ளும் என்பதுதான் அதற்குப் பொருள். தான் மட்டுமே கொரோனாவை தூக்கிச் சுமப்பதாகாக மோடி காட்டிக்கொள்ள வேண்டாம் என்பதுதான் அதில் புதந்திருக்கும் பொருள்.












Click it and Unblock the Notifications