எடப்பாடி பழனிசாமியே சர்டிபிகேட் கொடுத்திருக்காரு பாருங்க.. பாயிண்டை பிடித்த அமைச்சர் தங்கம் தென்னரசு
சென்னை: அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் வருவாய் அதிகம் வந்திருப்பதாக எடப்பாடி பழனிசாமியே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார் எனக் கூறியுள்ளார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு.
2024-2025ம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று காலை தாக்கல் செய்தார். பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி அமைச்சர் தங்கம் தென்னரசு, அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது எனத் தெரிவித்தார்.

திமுக அரசின் பட்ஜெட்டை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, "இந்த ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து வருடா வருடம் கடன் பெற்று தான் இந்த ஆட்சி நடத்தி வருகிறது. ஜிஎஸ்டி, பெட்ரோல் டீசல் உள்ளிட்ட அதிக வருமானம் வருகிறது. அதிமுக ஆட்சியை விட இப்பொழுது அதிக வருமானம் தான் வருகிறது. ஆனால் எந்த திட்டங்களும் முறையாக அறிவிக்கப்படவில்லை." எனத் தெரிவித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் காட்டமான விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கையை வெளியிட்டுள்ளார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. அதில், அ.தி.மு.க ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க ஆட்சியில் வருகிறது என்று எடப்பாடி பழனிசாமியே திமுக அரசுக்கு நற்சான்றிதழ் கொடுத்திருக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ளார் தங்கம் தென்னரசு.
தங்கம் தென்னரசு கூறுகையில், "எடப்பாடி பழனிசாமி அளித்த அந்தப் பேட்டியில் அவரே ஒரு உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். "அ.தி.மு.க ஆட்சியை விட அதிக வருவாய் இப்போது தி.மு.க ஆட்சியில் வருகிறது" எனச் சொல்லியிருக்கிறார். அதாவது வருவாயைப் பெருக்கும் பணியைத் தி.மு.க அரசு செவ்வனே செய்து வருகிறது என அவரே சர்டிபிகேட் கொடுத்திருக்கிறார். கடனை அடைக்க வருவாயைப் பெருக்கும் வழியையும் மு.க.ஸ்டாலின் அரசு செய்து கொண்டிருக்கிறது. நிச்சயமாகக் கடனை அடைக்கும் வழிகளை இன்னும் சிறப்பாக இந்த அரசு மேற்கொள்ளும்.
தி.மு.க. அரசின் பட்ஜெட் கானல் நீர் போன்றது; மக்களுக்குப் பயன் தராது எனச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அது பயன் தரும் என நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பு எழுதுவார்கள். கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் பட்ஜெட்டுகளில் வெளியான அறிவிப்புகள் புஸ்வாணமானதை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மறந்துவிட வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications