மணிப்பூர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதி காப்பது ஏன்.. தங்கம் தென்னரசு கேள்வி
சென்னை: மணிப்பூர் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவதாக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குகி பழங்குடி ஆகிய இரு சமூகங்களுக்கு இடையே வன்முறை நடைபெற்று வருகிறது. இதனால் மணிப்பூரில் பதற்றமான சூழல் நிகழ்ந்து வருகிறது. வன்முறையின் போது 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள்.

78 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தை திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். மேலும் மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஹேராதாஸ் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனைய குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் காட்டுமிராண்டித்தனமானது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தூக்கில் போட வேண்டும் என குஷ்பு உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் போது போலீஸார் அந்த கும்பலை தடுக்காமல் கை கட்டி வேடிக்கை பார்த்து வந்ததாக அப்பகுதி பெண்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினும் கண்டித்து தனது ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் மணிப்பூரில் பெண்கள்மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரமான வன்முறையால் என் இதயமே நொறுங்கிவிட்டது. நம்முடைய மனசாட்சி எங்கே போனது?
இத்தகைய வெறுப்பும், விஷமத்தன்மையும் மனிதகுலத்தின் ஆன்மாவையே வேரோடு பிடுங்குகிறது. எனவே, இத்தகைய கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒற்றுமையாக நின்று, மரியாதைக்குரிய சமூகத்தை வளர்ப்பதற்கு உழைக்க வேண்டும். மேலும், மணிப்பூரில் அமைதி திரும்பத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்த நிலையில் இன்றைய தினம் தமிழக அமைச்சரவை கூடியது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், முதியோர் உதவித்தொகை ரூ 1000 திலிருந்து ரூ 1200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அது போல் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500-ஆகவும் கைம்பெண்களுக்கான உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ1,200-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது என்றார். இதைத் தொடர்ந்து அவர் மணிப்பூர் விவகாரம் குறித்து பேசுகையில் மணிப்பூர் விவகாரம் பற்றி அதிமுக இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது. மணிப்பூர் விவகாரத்தை கண்டிக்காமல் எதிர்க்கட்சி தலைவர் அமைதி காப்பது ஏன் என்றும் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications