அதிகரித்த வட்டி.. ரூ.1000 முதலீட்டில் ரூ.5 லட்சம் அள்ளலாம்! செல்வமகள் திட்டத்துக்கு வந்த குட்நியூஸ்
சென்னை: பெண் குழந்தைகளுக்கான சிறப்பான சேமிப்பு திட்டமாக இருப்பது செல்வமகள் சேமிப்பு (Sukanya Samriddhi Yojana) திட்டம்தான். இந்நிலையில், இந்த திட்டத்தின் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டிருக்கிறது.
பெண் குழந்தைகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும், அவர்களின் கல்வியை ஊக்கப்படுத்தவும் கடந்த 2015ம் ஆண்டு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டதுதான் சுகன்யா சம்ருதி யோஜனா திட்டம். இந்த திட்டம் தமிழ்நாட்டில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள சேமிப்பு திட்டங்களில் அதிக வட்டி இந்த திட்டத்திற்குதான் வழங்கப்படுகிறது. எனவே பலரும் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கை தொடங்கி வருகின்றனர்.

தேசிய அளவில் தமிழ்நாட்டில்தான் இந்த திட்டத்தின் கீழ் அதிக அளவு கணக்குகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இந்த திட்டத்தில் சேர்வது மிக எளிதானது. இந்த திட்டம் பெண் குழந்தைகளுக்கு மட்டுமே பொருந்தும். திட்டத்தில் சேரும் பெண் குழந்தைகளுக்கு 10 வயது மிகாமல் இருக்க வேண்டும். கட்டாயமாக அந்த குழந்தைகள் இந்திய குடியுரிமையை பெற்றிருக்க வேண்டும். அதேபோல ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண்குழந்தைகள் மட்டுமே இந்த திட்டத்தில் சேர்க்க முடியும்.
இவையனைத்தும் உங்கள் குழந்தைகளுக்கு பொருந்தினால் போதும். உடனே அருகில் உள்ள தபால் நிலையங்களுக்கு சென்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் விண்ணப்ப படிவம் பெற்று அதில் உங்கள் குழந்தைகளை சேர்த்துவிடுங்கள். குறைந்தபட்சமாக மாதம் ரூ.250 வரை கட்டலாம். அதிகபட்சமாக வருடத்திற்கு 1.5 லட்சம் வரை டெபாசிட் செய்ய முடியும். இதன் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும். அதாவது நீங்கள் உங்கள் மகளின் பெயரில் 15 ஆண்டுகளுக்கு அல்லது மகளுக்கு திருமணம் ஆகும் வரை பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும். அப்படி செய்து வந்தால் உங்கள் மகள் 21 வயது எட்டும்போது வட்டியுடன் முழு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.
இந்த முதலீடுக்கு வரிவிலக்கு உண்டு. பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம். மட்டுமல்லாது நீங்கள் வெளி ஊர்களுக்கு இடம் பெயர்கிறீர்கள் எனில், அந்த ஊருக்கும் இந்த திட்டத்தின் அக்கவுண்ட்டை மாற்றிக்கொள்ளலாம்.
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து மத்திய அரசு பொன்னான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பை தொடங்குவோருக்கு 8.0 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டிருந்தது. தற்போது இதனை 0.2 சதவிகிதம் உயர்த்தி 8.2 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. இதன் மூலம் மாதம் ரூ.1000 முதலீடு செய்தால் முதிர்வு காலத்தில் ரூ.5,70,205ஐ பெற முடியும் எனவே உடனடியாக முதலீடு செய்யுங்கள்.












Click it and Unblock the Notifications