சட்டசபைத் தேர்தலில் அதிமுக திமுக இடையேதான் போட்டி... தேசிய கட்சிகள் பொருட்டே அல்ல - கே.பி. முனுசாமி
யார் வெளியே வந்தாலும் அது அதிமுகவை பாதிக்காது என்றும் ஸ்லீப்பர் செல் என்று அதிமுகவில் யாரும் இல்லை என்று அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
சென்னை: சட்டசபைத்தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி கூறியுள்ளார்.
Recommended Video
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு செயற்குழு கூட்டம் இன்று சென்னை வானகரத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அரசை பாராட்டி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி சட்டசபைத்தேர்தலில் அதிமுக - திமுகவிற்கு இடையேதான் போட்டி. தேசிய கட்சிகள் ஒரு பொருட்டே இல்லை. அவர்கள் அதிமுக அல்லது திமுக முதுகில் ஏறிதான் பயணம் செய்ய வேண்டும் என்று கூறினார். களத்தில் அவர்கள் ஒதுங்கி நின்று வேடிக்கை மட்டுமே பார்ப்பார்கள் என்றும் தெரிவித்தார்.
அதிமுகவில் சிலீப்பர் செல்களுக்கு வாய்ப்பே இல்லை. சிலர் வெளியே வருவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை. அவர் வெளியே வந்தாலும் அவருக்கு ஆயிரம் பிரச்னைகள் உள்ளது. சசிகலா வந்தால் கட்சி உடையும் என்கிறார்கள்; ஆனால் அது நிச்சயம் நடக்காது என்றும் தெரிவித்தார்.
கடந்த மாதம் அதிமுக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்ற போது துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜகதான் அறிவிக்கும் என்று பாஜக மாநில தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதற்கு பதிலடி தரும் வகையில் பேசினார் கே.பி. முனுசாமி.
வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து விடுதலையாக உள்ளார். சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் மாற்றம் ஏற்படலாம் பிரிவு வரலாம் என்று ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல் கட்சித்தலைவர்கள் கூறி வருகின்றனர். இந்த நிலையில் அனைவருக்கும் பதிலடி தரும் விதமாக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் பேசியுள்ளார் கே.பி. முனுசாமி.