சட்டம் தன் கடமையை செய்யும் - பாஜகவின் வேல் யாத்திரைக்கு முதல்வர் பழனிசாமி பதில்
தமிழக அரசின் தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தியது குறித்த கேள்விக்கு முதல்வர் பழனிசாமி சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று பதில் அளித்துள்ளார்.
சென்னை: தடையை மீறி பாஜகவினர் வேல் யாத்திரை நடத்துவது பற்றி முதல்வர் பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு சட்டம் தன்னுடைய கடமையை செய்யும் என்று கூறியுள்ளார்.
திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை ஒரு மாதம் வேல் யாத்திரை திட்டமிட்டு அறிவித்தது பாஜக. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெற இருந்த வேல் யாத்திரைக்கு தமிழக அரசு அனுமதி மறுத்தது.
தடையை மீறி, தமிழக பாஜக தலைவர் எல். முருகன் திட்டமிட்டபடி இன்று காலையில் திருத்தணிக்கு புறப்பட்டார். அவருக்கு வழிநெடுக்கிலும் உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. முருகன் சென்ற வாகனத்தின் பின்னால் பாஜகவினர் வாகனங்களில் அணிவகுத்து சென்றனர். திருவள்ளூர் மாவட்டம் நசரத் பேட்டை அருகே அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது பேசிய முருகன், நான் கடவுள் முருகனை வணங்கவே திருத்தணி செல்கிறேன் என்று கூறினார். முருகப்பெருமான் அனுமதியுடன். ஆசியுடன் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடைபெறும் என்று கூறிய அவர், முருகனை எதிர்ப்பவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காகவே வேல் யாத்திரை நடத்தப்படுவதாகவும் கூறினார் முருகன்.
காவல்துறையினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல். முருகனுடன் ஐந்து வாகனங்களை மட்டுமே திருத்தணி செல்ல காவல்துறையினர் அனுமதித்தனர். இதனையடுத்து திருத்தணி சென்ற முருகனுக்கு பாஜகவினர் வரவேற்பு அளித்தனர். வெற்றிவேல்... வீர வேல் என்ற முழக்கத்துடன் திருத்தணியில் சுப்ரமணியசாமியை கும்பிட்டார் எல். முருகன்.
இந்த நிலையில் நீலகிரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் செய்தியாளர்கள் பாஜக நடத்தும் வேல் யாத்திரை பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி, சட்டம் தனது கடமையை செய்யும் என்று பதிலளித்தார்.