மெட்ரோ ரயிலை பிடிக்க இப்படியெல்லாம் பண்ணாதீங்க! வார்னிங் கொடுத்த சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை: நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
சென்னையின் போக்குவரத்து நெரிசல் பற்றி அனைவரும் அறிந்ததுதான். இந்த போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு பாலங்கள், புதிய சாலைகளை கட்டுவதைவிட பொது போக்குவரத்தை அதிகரிப்பதுதான் நல்ல பலனை கொடுக்கும் என்று ஆய்வாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில், சென்னையில் கடந்த 2015ம் ஆண்டு மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கியது. சென்ட்ரல் முதல் விமான நிலையம் வரை முதற்கட்டமாக மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த வழித்தடம் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் எதிர்பார்த்ததை போலவே பயணிகளின் எண்ணிக்கையும், அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக விழா நாட்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் மெட்ரோ ரயிலை பயன்படுத்த தொடங்கினர். இதனையடுத்து கட்டண சலுகை, பெண்களுக்கு முக்கியத்துவம், விழா கால சலுகை, மற்றும் கூடுதல் நேரம் நீட்டிப்பு என மெட்ரோ நிர்வாகம் பயணிகளுக்கு ஏற்ப சிறப்பு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது.
அதேபோல மறுபுறம் பயணத்தின் போது பின்பற்ற வேண்டிய குறித்தும் மெட்ரோ சில அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறது. அதாவது, நெரிசல் மிகுந்த நேரங்களில் மெட்ரோ ரயில் இயக்கத்தை தடுக்கும் வகையில் செயல்படும் பயணிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுதான் அந்த எச்சரிக்கை.
"கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்கும் முயற்சியாக தானியங்கி கதவுகள் மூடும் போது கைவசம் உள்ள பொருட்களை தூக்கி வீசி கதவுகளை திறக்க முயற்சிப்பது போன்ற ஆபத்தான செயல்களில் பயணிகள் ஈடுபடுவதால் அலுவல் நேரங்களில் 3 நிமிடத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் ரயில் சேவை பாதிக்கப்படுகிறது. இது போன்ற செயல்களில் ஈடுவோருக்கு மெட்ரோ ரயில் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சட்டம் 2002 பிரிவு 67ன் படி 4 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் 75000 அபராதம் விதிக்கப்படும்" என்று மெட்ரோ எச்சரித்துள்ளது.
காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுவாக மெட்ரோவை அதிக அளவில் பயணிகள் பயன்படுத்துகின்றனர். இப்படி இருக்கையில், சிலர் மேற்குறிப்பிட்டதை போன்று விரும்பத்தகாத நடவடிக்கையில் ஈடுபடுவதாக அடிக்கடி புகார்கள் எழுகின்றன. இந்த புகாரையடுத்து தற்போது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.












Click it and Unblock the Notifications