முன்பு டெல்லி.. இப்போது மும்பை.. பால்கனி அரசு தரையில் நடப்பதை கவனிக்கணும்.. கமல்
சென்னை: பால்கனி அரசு தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும் என்று வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் குரல் எழுப்பி உள்ளார்.
கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வரும் நிலையில், அதை தடுக்க கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14ம் தேதியான இன்றுடன் முடிந்த நிலையில் மேலும் 19 நாட்கள் ஊரடங்கு உத்தரவினை பிரதமர் மோடி பிறப்பித்துள்ளார்.
இதன் காரணமாக நாடு முழுவதும் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பாகி உள்ளது. இதனால் விமானம், ரயில், பேருந்து சேவைகள் அனைத்தும் மே 3ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

மே3 வரை ஊரடங்கு
பிரதமர் மோடியின் இந்த ஊரடங்கு நீட்டிப்பை சாமானிய மக்கள் சுத்தமாக விரும்பாத நிலை நிலவுகிறது. இதற்கு காரணம் அவர்களின் பொருளாதாரம், வறுமை ஊரடங்கை நீடித்ததை வெறுக்க வைத்துள்ளது. இது ஒருபுறம் எனில் ஊரடங்கு நீட்டிப்பு என்பது இந்தியா முழுவதும் புலம்பெயர்ந்த வெளிமாநில தொழிலாளர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

போலீஸ் தடியடி
மும்பை பாந்த்ராவில் வெளிமாநிலத் தொழிலாளர்கள் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் குவிந்தது தங்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் தொழிலாளர்கள் இந்த சமூக இடைவெளி இல்லாத போராட்டம் கொரோனா பரவலை மேலும் அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த போராட்டத்தை மும்பை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.

பசியால் தவிப்பு
முன்னதாக டெல்லியில் கடந்த சில வாரம் முன்பு பல்லாயிரம் வெளிமாநில தொழிலாளர்கள் வேலையில்லாததால் பசி கொடுமையால் சொந்த ஊருக்கு பல நூறு மைல் நடந்தே சென்றனர். மேலும் பேருந்து நிலையங்களில் குவிந்த நின்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

வெளிமாநில தொழிலாளர்கள்
இந்த இரு சம்பவங்களையும் குறிப்பிட்டு கமல்ஹாசன் மத்திய அரசை விமர்சித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் தனது பதிவில், "பால்கனி அரசு தரையில் என்ன நடக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். முன்பு டெல்லி, இப்போது மும்பையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சனை வெடிகுண்டை போன்றது. அது வெடிக்கும் முன்பு தணிக்க வேண்டும். இநத் பிரச்னை கொரோனாவை விட பெரும் நெருக்கடியாக மாறும் முன் தடுக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications