ஜாதி மோதலாக உருமாறும் அதிமுகவின் அதிகார மோதல்! தேவர் இனத்திற்கு துரோகம்! பரபரப்பு போஸ்டர்!
சென்னை: அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் இடையே நடைபெற்று வரும் அதிகார மோதல் மெல்ல உருமாறி ஜாதி மோதலாக மாறி வருகிறது.
ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக தேவர் சமுதாய அமைப்பினர் தொடர்ச்சியாக போஸ்டர்கள் ஒட்டி வருவதோடு, அதில் சசிகலா மற்றும் டிடிவி தினகரனுக்கும் நியாயம் கேட்டிருக்கிறார்கள்.
நேற்று திருப்பூரிலும் இன்று சென்னையிலும் இது போன்ற பரபரப்பான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு பெரியளவில் கவனம் ஈர்த்து வருகின்றன.

தென்னாடு மக்கள் கட்சி
தென்னாடு மக்கள் கட்சித் தலைவர் கணேசத்தேவர் என்பவர் பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டியில், ''தேவர் இனத்தில் பிறந்து தேவர் இனத்திற்கே துரோகம் செய்யும் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை வன்மையாக கண்டிக்கிறோம்'' என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், ''அன்று டிடிவி தினகரன்.. பின்று சசிகலா.. இன்று ஒபிஎஸ்'' என்ற வாசகங்களும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளன. இதேபோல் ஒரு போஸ்டர் திருப்பூரில் ஒட்டப்பட்டிருந்த சூழலில் இப்போது சென்னையிலும் ஒட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.

ஆர்.பி.உதயகுமார்
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தபோது ''சின்னம்மா முதலமைச்சர் பதவியை ஏற்க வேண்டும்'' என உருகி உருகி பேட்டிகள் கொடுத்தார் ஆர்.பி.உதயகுமார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஒரு வழியாக ராஜினாமா செய்து பிறகு தர்மயுத்தம் நடத்திய காலத்தில் சசிகலா பக்கம் நின்ற ஆர்.பி.உதயகுமார், அவர் சிறை சென்ற பிறகு டிடிவி தினகரனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றார்.

பவர் பாலிடிக்ஸ்
இதனிடையே இப்போது நடைபெறக் கூடிய அதிகார மோதலிலும் ஓபிஎஸ் க்கு ஆர்.பி.உதயகுமார் இன்னும் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் தான் ஆர்.பி.உதயகுமாரை வன்மையாக கண்டிக்கிறோம் என்ற பெயரில் அவருக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இன்னொரு விவகாரத்தையும் நாம் இதில் கவனித்தாக வேண்டும். இபிஎஸ் -ஓபிஎஸ் என்ற இரு தனி மனிதர்களுக்கு இடையே நடைபெறும் பவர் பாலிடிக்ஸ் ஜாதி பாலிடிக்ஸாக மாறி வருவதை யாரும் மறுக்க இயலாது.

ரவீந்தரன் துரைசாமி
இது தொடர்பாக அரசியல் பார்வையாளர் ரவீந்தரன் துரைசாமியிடம் நாம் பேசிய போது அவர் கூறியதாவது, ''அதிமுக பிளவை நோக்கி செல்கிறது என்பது மட்டும் உண்மை. எடப்பாடி பழனிசாமி -ஓ.பன்னீர்செல்வம் இடையேயான ஈகோ யுத்தம் நிச்சயம் ஜாதி ரீதியாகவும் எதிரொலிக்கும். ஜெயலலிதா செய்த தவறுகளால் தான் இன்று இது போன்ற ஒரு நிலை உருவாகியுள்ளது. முக்குலத்தோர் சமுதாயத்தினர் நிச்சயம் பன்னீர்செல்வத்தை தூக்கிப் பிடிப்பார்கள். கொங்கு வேளாளக் கவுண்டர்கள் ஆர்ப்பாட்டமின்றி எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அணி திரட்டி வருகிறார்கள். இரண்டு சமுதாயத்தை சேர்ந்தவர்களும் அவரவர் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக நிற்கத்தானே செய்வார்கள். அதிலென்ன உள்ளது.'' என க் கூறினார்.












Click it and Unblock the Notifications