அதிமுகவிலிருந்து இஸ்லாமிய பிரமுகர்கள் வரிசையாக நீக்கம்; புகையும் சர்ச்சை; அடுத்தது யார்?
சென்னை: அதிமுகவிலிருந்து வரிசையாக இஸ்லாமிய பிரமுகர்களை நீக்கப்படுவது கடும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
அண்மையில் அதிமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகி ஜே.எம்.பஷீரை கட்சியிலிருந்து கட்டம் கட்டிய தலைமை, இப்போது அன்வர் ராஜாவை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கிறது.
இன்னும் அதிமுகவில் எஞ்சியிருக்கும் இஸ்லாமிய பிரமுகர்களில் தமிழ்மகன் உசேனும், ஜவஹர் அலியும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

அதிமுக
அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து இரண்டு இஸ்லாமிய முக்கியப் பிரமுகர்களை நீக்கியிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது. அதிமுக சிறுபான்மையினர் அணி நிர்வாகியான ஜே.எம்.பஷீரை கடந்த மாதம் கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அவரைத் தொடர்ந்து அடுத்த விக்கெட்டாக எம்.ஜி.ஆர்.காலத்து சீனியரும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எல்லாம் உறுப்பினர் ஆவதற்கு முன்பே உறுப்பினராக இணைந்தவருமான அன்வர் ராஜா வீழ்த்தப்பட்டுள்ளார்.

முக்கியப் பொறுப்பு
இந்த இரு நிகழ்வுகளும் அதிமுகவில் சிறுபான்மையினருக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காது என்ற தோற்றத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. அதிமுகவை பொறுத்தவரை அன்வர் ராஜா, ஜே.எம்.பஷீர், செய்தித் தொடர்பாளர் ஜவஹர் அலி, தமிழ் மகன் உசேன் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் இஸ்லாமிய பிரமுகர்கள் இருந்தனர். அதில் இப்போது முதல் இருவர் கட்சியில் இல்லாததால் அடுத்துள்ள இருவருக்கு தான் சிறுபான்மையினர் அணியில் முக்கியப் பொறுப்பு கிடைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நம்பிக்கை
முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், தமிழ்மகன் உசேன், ஜவஹர் அலி ஆகிய மூவரில் தமிழ் மகன் உசேனுக்கு கட்சிப் பதவியில் ஜாக்பாட் அடிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. அன்வர் ராஜா மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை காரணமாக எழும் சலசலப்பை தமிழ் மகன் உசேன் மூலம் ஈடுசெய்ய முடியும் என்பது அதிமுக தலைமையின் நம்பிக்கையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
Recommended Video

இ.பி.எஸ்.
அன்வர் ராஜா, ஜே,எம்.பஷீர் ஆகிய இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகம் பங்கிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஏனெனில் நீக்கப்பட்ட இருவரும் இ.பி.எஸ். பற்றி பேசித்தான் வம்பில் மாட்டியவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் அன்வர் ராஜா மீதான நடவடிக்கைக்கு மிகுந்த தயக்கம் காட்டியதாகவும் கடும் அழுத்தத்திற்கு பிறகே அவர் கையெப்பமிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications