‘கில்லி’ 200 நாட்கள் ரெக்கார்ட்! 10 கோடி பட்ஜெட்.. அன்று விஜய் சொன்ன சீக்ரெட்ஸ் தெரியுமா?
சென்னை: 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான கில்லி திரைப்படத்தின் போது என்ன நடந்தது என்று தெரியுமா?
விஜய் நடிப்பில் 20 ஆண்டுகள் முன்னால் வெளியான 'கில்லி' மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.

பல தயாரிப்பாளர்கள் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு வெளியிட முடியாமல் தவித்து வருகின்றனர். சின்ன படங்களுக்கு சரியாக தியேட்டர் கிடைப்பதில்லை என்று பல இளம் இயக்குநர்கள் கண்ணீர் வடித்து கொண்டிருக்கின்றனர்.
அப்படியான காலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான கில்லி, திரையரங்கிற்கு திரை ரசிகர்களை துள்ளி குதித்து அழைத்து வரச் செய்துள்ளது. பல திரையரங்க உரிமையாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 320 திரையரங்குகளில் திரையிட்ட கில்லி முதல் நாள் மட்டும் நான்கு கோடியே 25 லட்சம் வசூல் செய்தது. மூன்று நாள்களில் மட்டும் 9 கோடியே 85 லட்ச ரூபாய் வசூல் செய்துள்ளது என்கிறார்கள்.
இரண்டு நாட்கள் முன்னதாக ஒரு சினிமா விழாவில் பேசிய தயாரிப்பாளர் தனஞ்செயன், "கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான கில்லி, இப்போது மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு சக்கைப்போடு போட்டு வருகிறது.

மிகப்பெரிய வசூலையும் குவித்து வருகிறது. ஒரு நல்ல திரைப்படம் எத்தனை ஆண்டுகள் கழித்து திரையிட்டாலும் ஓடும். அதற்கு கில்லி சரியான உதாரணம்" என்று கூறியிருந்தார்.
கில்லி கதை மிகப்பெரிய வித்தியாசமான கதை எல்லாம் கிடையாது. பக்கா கமர்ஷியல் ஃபார்முலா நிறைந்த ஒரு திரைக்கதைதான். வில்லனிடம் மாட்டிக் கொண்ட நாயகி த்ரிஷாவை மீட்டு, நாயகன் விஜய் கல்யாணம் பண்ணிக் கொள்கிறார் அவ்வளவுதான்.
ஆனால், அதிரடியான ஆக்ஷன், விறுவிறுப்பான திரைக்கதை, தடதடக்கும் காட்சிகள் எனப் படம் ஓவர் ஸ்பீடில் சென்றதால் ரசிகர்கள் எல்லோரும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து ரசித்தனர்.
கட்டாயம் வில்லன் பிரகாஷ்ராஜ் நடிப்பை சொல்லியே ஆகவேண்டும். செல்லம் செம பர்ஃபாமன்ஸ் பண்ணி இருப்பார்.
2004 ஆம் ஆண்டு சென்னை உதயம் காம்ப்ளக்சில் உள்ள 3 தியேட்டர்களில் தினசரி 4 காட்சிகள் 3 நாள்கள் தொடர்ந்து ஓடிய ஒரே திரைப்படம் கில்லிதான்.
"வசூல் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் செய்ய வேண்டும் என்று நினைத்த 3 விதமான கதைகள் இந்த ஒரே படத்தில் அமைந்துவிட்டதுதான் எனக்கு ரொம்ப சந்தோஷமான விசயம்" என்று கடந்த 20 ஆண்டுகள் முன் பேட்டி அளித்திருந்தார் படத்தின் இயக்குநர் தரணி
தரணி, தனது தூள் படத்தை முடித்து விட்டு 'கில்லி'யை இயக்கி வெளியிட்டார்.
அவரும் அவரது உதவி இயக்குநர்களும் ஒருநாள் தெலுங்குப் படத்தை பார்க்க சென்றபோது அதிர்ச்சி காத்திருந்தது. அது அவர் மனதில் பல ஆண்டுகளாக ஊறவைத்திருந்த கதை.
ஃபுட்பால் ஆடும் நாயகன். நாயகியை தட்டித் தூக்கும் வில்லன் என்று படம் அவரது கதை சாயலில் படம் இருந்தது. உடனே நாமே இதை ரீமேக் செய்வோம் என்று முடிவு செய்தார்.
அந்தப் படத்தில் விஜய், த்ரிஷா ஜோடியின் கெமிஸ்ட்ரி மிகப்பெரிய அளவில் ஒர்க் அவுட் ஆனது. ஒரு பேட்டியில் விஜய் கூட தனக்கு சரியான ஜோடி த்ரிஷா தான் என்று கூறும் அளவுக்கு இந்த ஜோடி திரையை ஆக்கிரமித்திருந்தது.
இந்தப் படத்தில் வில்லன் பிரகாஷ் ராஜ்ஜை ஒருநாள் ஷூட்டிங்கில் 'சும்மா ஹாய் செல்லம் என்று சொல்லுங்கள்' என்று தரணி சொன்னார். அது காட்சியாக்கப்பட்டது.
சாதாரணமாக சொன்ன செல்லம் டயலாக் தமிழ்நாட்டையே புரட்டிப் போடும் அளவுக்கும் பிரகாஷ் ராஜ் என்ற நடிகரின் புகழை உச்சத்திற்கு கொண்டு போகும் அளவுக்கு மாறியது.

இருபது ஆண்டுகள் முன்னால் கில்லி வெளியான போது 200 நாட்கள் ஓடி சாதனைப் படைத்தது. அந்தக் காலத்தில் படத்தின் தயாரிப்பு செலவு 10 கோடி என்று சொல்லப்பட்டது. அப்போதே மொத்தம் 18 கோடி வசூல் செய்தது இந்தப் படம்.
இத்தனைக்கும் இது தமிழ்ப் படம் இல்லை. தெலுங்கில் வெளியான ஒக்கடு படத்தின் ரீமேக். தெலுங்கைவிட விஜய்யின் கில்லி அபார வெற்றி பெற்றது. இதே ஆண்டு வெளியான சேரனின் ஆட்டோகிராப் 175 நாள்கள் வரை ஓடி சாதனைப் படைத்தது. அந்த ஆண்டு முன்னணி வசூல் செய்த படம் கில்லிதான்.
அவ்வளவு பெரிய ஹிட் கொடுத்த பிறகு நடிகர் விஜய் இயக்குநர் தரணியுடன் இணைந்த படம் 'குருவி'. தனது கில்லி மூலம் உச்சத்திற்கு விஜய்யைக் கொண்டுபோன தரணி, இரண்டாவது படம் மூலம் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தி கொடுத்தார். அதுதான் சினிமா.
அப்படிப் போடு போடு தன்னால!












Click it and Unblock the Notifications