ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. சரணடைந்தவர்களும் கொலையாளிகளும் வேறு வேறு! சிபிஐ விசாரணை கோரும் பகுஜன் சமாஜ்..!
சென்னை: சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது எனவும், அதனால் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கொலையின் பின்னணிகளை கண்டறிய வேண்டும் என தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர பொதுக்குழுவில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதோடு, சிபிஐ விசாரணை கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்து அடுத்தடுத்து பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி வருகிறது.

நேற்று வீட்டு அருகே ஆம்ஸ்ட்ராங் நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதை அடுத்து அவரது உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வழக்கறிஞர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கூடி வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தை கண்டித்து தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகள் வெளியிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பாக தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலையாளிகளாக சரணடைந்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. சரணடைந்த பொன்னை பாலு சுரேஷின் சகோதரர் என்பது தெரிய வந்திருக்கும் நிலையில் ஆற்காடு சுரேஷின் நினைவு நாள் அல்லது பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல திட்டமிட்டதாகவும் தற்போது பிறந்த நாளிலேயே அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது கொலை வழக்கில் சரணடைந்திருப்பவர்களும் உண்மையான கொலையாளிகளும் வேறு வேறு எனவும் வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வருகிறது. இந்நிலையில் தற்பொழுது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது என்று தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர பொதுக்குழு குற்றம்சாட்டியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை கண்டித்து ரமாபாய் அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் கூடியது.
இதில் கீழ்கண்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி,"பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் படுகொலை திட்டமிட்ட அரசியல் படுகொலையாகும் அதனால் இக்கொலை வழக்கினை CBI கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும், கே. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் உடலை அரசு மரியாதை உடன் அரசு பொது இடத்தில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும்.
தற்பொழுது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் மாநில தலைவர் கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது அதனால் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கொலையின் பின்னணிகளை கண்டறிய வேண்டும். காவல் துறையின் உளவுத்துறை பிரிவின் தோல்வியால் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் உளவுத்துறை ADGPயை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற உள்ளதால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில பொறுப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள், தொகுதி தலைவர்கள், பகுதி டிவிஷன்,செக்டார், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் அனைவரும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாநில குழுவின் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை முன்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.













Click it and Unblock the Notifications