உள்ளாட்சி தேர்தல் விவகாரம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சமாளிக்க வெளியிடப்பட்டதா அரசாணை?
சென்னை: உள்ளாட்சி தேர்தலுக்கான அரசாணை வெறும் கண்துடைப்பு தான் என, சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த மூத்த வழக்கறிஞரான வில்சன், சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இழுத்தடிக்கவே தமிழக அரசு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அரசாணையை வெளியிட்டுள்ளதாக சாடியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்வதற்கான பணிகளை தொடங்குவது உள்ளிட்டவை குறித்த வழிமுறைகளை பற்றிய தகவல்கள் அந்த அரசாணையில் உள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள மூத்த வழக்கறிஞர் வில்சன், உள்ளாட்சி தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. 2018 டிசம்பர் மாதத்திலிருந்து இந்த மே மாதம் வரை தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை வெளியிட எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
ஆகவே வாக்காளர் பட்டியல் வார்டு வாரியாக தயாரித்த பின்னர் தான் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியும். அதற்கான முயற்சிகள் எதையுமே மாநில தேர்தல் ஆணையம் இதுவரை செய்யவில்லை. தற்போது அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பூத் வாரியாக எப்படி செயல்பட்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று கூறியிருப்பது வெறும் கண்துடைப்பிற்காக மட்டுமே.
இந்த அரசாணையால் உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் எவ்வித முன்னேற்றமும் இருக்க போவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார். சென்னை உயர்நீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை
இது தொடர்பாக திமுக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு 3 மாத கால அவாசம் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications