முதல்ல ரெய்டு.. உடனே பாஜகவுக்கு ரூ.100 கோடி நன்கொடை! வசமாக சிக்கிய தமிழ்நாட்டு கம்பெனி!
சென்னை: தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நிறுவனம் வருமான வரி சோதனையில் மாட்டிய பிறகு பாஜகவுக்கு ரூ.100 கோடியைத் தேர்தல் நன்கொடையாக வழங்கி உள்ளது என்ற உண்மையைப் பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன் கண்டுபிடித்துள்ளார். அந்தச் செய்தி அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
2018 முதல் 2023 வரை 30 நிறுவனங்கள் பாஜகவுக்கு ரூ.335 கோடி நன்கொடை கொடுத்துள்ளன. அதில் என்ன வியப்பு? சாதாரணமாக அனைத்து நிறுவனங்களும் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை தருவது சகஜமானது தானே என்று நீங்கள் கேட்கலாம்.

இந்தக் குறிப்பிட்ட 30 நிறுவனங்களும் வருமான வரி சோதனை அல்லது அமலாக்கத்துறை சோதனை நடத்தப்பட்ட பிறகு பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளன என்பதுதான் ஹைலைட் நியூஸ்.
அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் ரெய்டுக்குப் பிறகு பாஜகவுக்கு ரூ.100 கோடி நன்கொடை அளித்துள்ளது.

இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஆவணங்களைத் திரட்டி அந்த உண்மைகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளார் பத்திரிகையாளர் தான்யா ராஜேந்திரன்.
இது தொடர்பாக அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்துள்ளார். அதில் தான்யா, "முதலில் நாம் சில அடிப்படியான விசயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக அரசியல் கட்சிகளுக்கு மூன்று வழிகளில் நன்கொடை அளிக்கப்படுகிறது.

ஒன்று நேரடியாகப் பணமாக ஒரு சின்ன அளவில் நன்கொடை தருகிறார்கள். அடுத்து தேர்தல் பத்திரங்கள் மூலம் பணம் கொடுக்கிறார்கள். மூன்றாவது வருவது Electoral trust மூலம்.
நாங்கள் எது குறித்து விசாரணை நடத்தி இருக்கிறோம் என்றால் Election donation பற்றிய ஆவணங்களைத் திரட்டி இருக்கிறோம். அந்த ஆவணங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. அதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.

பாஜகவுக்குக் கடந்த 10 ஆண்டுகளில் 8 ஆயிரம் கோடி தேர்தல் நன்கொடை மூலம் கிடைத்துள்ளது. நாங்கள் ஆண்டு வாரியாக அளிக்கப்பட்ட தேர்தல் நன்கொடைகளைப் பற்றிய ஆவணங்களை மட்டும் தனியாக எடுத்து ஆராய்ந்தோம். அதில் ஒரு கோடிக்கு மேல் நன்கொடை கொடுத்த நிறுவனங்களைப் பற்றிய பட்டியலை மட்டும் எடுத்தோம்.
பல நிறுவனங்கள் அரசியல் கட்சிகளுக்கு கோடிகோடியாக பணம் கொடுக்கிறார்கள். அப்படிப் பாஜகவுக்கு நன்கொடை கொடுத்தவர்கள் யார்? அவர்கள் நிறுவனம் மீது வருமான வரி சோதனையோ அல்லது அமலாக்கத்துறை சோதனையையோ இந்தக் குறிப்பிட்ட 10 ஆண்டுகளில் நடத்தப்பட்டுள்ளதா? என ஆராய்ந்தோம்.
அப்படி ஆராய்ந்ததில் ஐடி ரெய்டு நடத்தப்பட்ட பிறகு ஒரு நிறுவனம் நன்கொடை கொடுத்துள்ளது தெரியவந்தது. உதாரணமாக அந்த நிறுவனம் ஏ என்று வைத்துக் கொள்வோம். அந்த ஏ கடந்த 2014 முதல் பாஜகவுக்கு நன்கொடையே கொடுக்கவே இல்லை.
அந்த நிறுவனத்தின் மீது 2018 ஐடி ரெய்டு நடத்தப்படுகிறது. அதன்பின்னர் அந்த ஆண்டு மட்டும் அந்நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை அளித்துள்ளது. 2022இல் மீண்டும் ஒரு ரெய்டு நடத்தப்படுகிறது. அப்போது திரும்பவும் அந்த நிறுவனம் பாஜகவுக்கு நன்கொடை தந்துள்ளது.

உதாரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள ஒரு நிறுவனம் பாஜகவுக்கு 100 கோடி கொடுத்துள்ளது. அதுவும் ரெய்டு நடத்தப்பட்ட பிறகு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது. இன்னொரு நிறுவனம் 11 கோடி கொடுத்துள்ளது.
இதே நிறுவனங்கள் மற்ற கட்சிகளுக்குக் கொடுத்துள்ளனவா என்று ஒப்பிட்டுப் பார்த்தோம். காங்கிரசுக்கோ அல்லது திமுகவுக்கோ அதிமுகவுக்கோ இவர்கள் கொடுத்தார்களா எனத் தேடினோம். அவர்கள் இந்தக் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்கவே இல்லை. பாஜகவுக்கு மட்டுமே கொடுத்துள்ளன.

அந்த 11 கோடியை அந்த நிறுவனம் எப்போது கொடுத்துள்ளது எனப் பார்த்தோம். அதன் மீது ரெய்டு நடந்த ஆண்டு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆகவே,தான் எங்களுக்கு ஒரு சந்தேகம் வந்துள்ளது. முதலில் ரெய்டு நடக்கிறது. அதன் பின்னர் பாஜகவுக்கு நன்கொடை போகிறது. இதில் ஏதோ ஒரு சந்தேகத்திற்கு உரிய யுக்தி உள்ளதாகத் தோன்றுகிறது.

இப்படி நன்கொடை கொடுத்த நிறுவனங்கள் அரசிடமிருந்து ஏதேனும் ஒருவகையில் ஆதாயம் பெற்றிருக்கலாம். அல்லது ஆதாயம் பெறுவதற்காகக் கொடுத்து ஒரு ஆதாயமும் கிடைக்காமல் கூடப் போய் இருக்கலாம். ஆனால், இந்த நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ள காலகட்டத்தை ஆராயும் போது நமக்கு ஒரு சந்தேகம் உருவாவது உண்மை.

உதாரணமாக தெலங்கானாவில் ஒரு நிறுவனம் உள்ளது. அது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏவின் நிறுவனம். பல ஆண்டுகளாகக் காங்கிரசிலிருந்து வந்த அவர்,பாஜகவுக்கு மாறிவிட்டார்.
இரண்டு ஆண்டுகள் பாஜகவிலிருந்தார். அப்போது அந்த ஆண்டு அந்த கம்பெனி 6 கோடி நன்கொடை பாஜகவுக்கு கொடுத்துள்ளது. அதன்பின்னர் அவர் மீண்டும் காங்கிரசுக்குச் சென்றுவிட்டார். உடனே 20 நாள்களில் அந்த நிறுவனம் மீது ஈடி ரெய்டு நடத்தப்படுகிறது.
சென்னையில் உள்ள ஒரு கம்பெனி 3 கோடி பாஜகவுக்கு நன்கொடை கொடுத்துள்ளது. அதன் முகவரியில் போய் கம்பெனி உள்ளதா எனப் பார்த்தோம். அந்த முகவரியில் அப்படி ஒரு நிறுவனமே இல்லை.

இப்படி பாஜகவுக்கு அளிக்கப்பட்ட நன்கொடை மீதும் அந்த நிறுவனங்கள் மீதும் சந்தேகம் எழுகிறது.
ஆகவேதான், தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு அளிக்கப்பட்டுள்ள நன்கொடை பற்றிய ஆவணங்களைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும். அப்படி வெளியிட்டால் பல உண்மைகள் உலகத்திற்குத் தெரியவரும்" என்று பேசி இருக்கிறார் தான்யா.












Click it and Unblock the Notifications