தேனி டூ சென்னை.. இளையராஜா எப்படி நேராக சென்ட்ரலுக்கு வந்திருக்க முடியும்.. தனுஷை ஓட்டும் நெட்டிசன்கள்
சென்னை: தேனி மாவட்டம் பண்ணைபுரத்தைச் சேர்ந்த இளையராஜா அந்த காலத்தில் மதுரையில் போய் ரயில் ஏறி, எப்படி நேரடியாக சென்னை சென்ட்ரலுக்கு போயிருக்க முடியும் என்று கேள்வி எழுப்பி தனுஷையும், இயக்குனர் அருண் மாதேஸ்வரனையும் நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், விமர்சித்தும் வருகிறார்கள்..
'கேப்டன் மில்லர்' படத்தைத் தொடர்ந்து தனுஷ் தானே இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தில் நடித்திருக்கிறார். அடுத்ததாக பிதா,லவ் ஸ்டோரி, லீடர் உள்பட பல்வேறு தெலுங்கு படங்களை இயக்கிய சேகர் கமுலா படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே புதிதாக நடிகர் தனுஷ் இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்

இந்தப் படத்துக்கு 'இளையராஜா' என்றே தலைப்பிடப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர் படத்தை இயக்கிய அருண் மாதேஸ்வரன் தான் இந்த படத்தை இயக்குகிறார். கனெக்ட் மீடியா, பிகே ப்ரைம் புரொடக்ஷன், மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரிக்க உள்ளன. நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இளையராஜாவின் இந்த பயோபிக்கிற்கு கமல் திரைக்கதை எழுத உள்ளதாக கூறப்படுகிறது.
தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தைச் சேர்ந்த இளையராஜா தனது அண்ணன் பாவலரின் பாட்டுக்குழுவில் இணைந்து இடதுசாரிகளின் கூட்டங்களில் சிறுவயதில் பாடி வந்தார். தேனி மாவட்டத்தை ஒட்டியுள்ள இடுக்கி மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்டுகளுக்காக பாட்டு பாடிய பாவலரின் குழுவில் இளையராஜா இருந்தார். பெண் குரலில் கங்கை அமரன் பாடுவார். இப்படித்தான் இளையராஜா இருந்தார். அவர் சினிமாவில் பாட ஆசைப்பட்டார்.. அதற்கு அவர் பயணித்த பயணங்கள், பாதைகள், கஷ்டங்கள் இதுவரை படமாக வந்தது இல்லை. முதல்முறையாக வரப்போகிறது.
சரி விஷயத்திற்கு வருவோம்.. அந்த காலத்தில் தேனி மாவட்டம் தனியாக இல்லை. மதுரை மாவட்டத்தின் ஒரு அங்கமாகவே இருந்தது. 1997ம் ஆண்டில் தான் மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டம் பிரிந்தது. அந்த காலத்தில் இப்போது உள்ளது போல் பேருந்து வசதி இல்லை.. யாராக இருந்தாலும் மதுரை போய் ரயில் அல்லது பேருந்தில் ஏறித்தான் போக வேண்டியது இருக்கும். தேனி பண்ணைபுரத்தில் இருந்து மதுரைக்கு போய் அங்கிருந்து ரயிலில் ஆர்மோனிய பெட்டியுடன் இளையராஜா இறங்கினார்.
சென்னையில் அறை எடுத்து தங்கிய இளையராஜா, ஆரம்பத்தில் தன்ராஜ் மாஸ்டரிடம் வெஸ்டர்ன் மியூசிக் கற்றுக்கொண்டார். பியானோ கிடார் உள்ளிட்டவற்றை தன்ராஜ் மாஸ்டரிடம் இளையராஜா கற்றுக்னகொண்டார். அவருடைய வாழ்க்கையில் பஞ்சு அருணாச்சலம் ஒளி ஏற்றி வைத்தார். 1976ல் வெளியான அன்னக்கிளி தான் இளையராஜாவின் முதல் படம்.. இளையராஜா சினிமாவிற்கு நுழைந்த போது கர்நாடக இசை, நாட்டுப்புற பாடல்கள், வெஸ்டர்ன் இசை என எல்லாவற்றையும் முறைப்படி கற்றுக்கொண்டார். அதேபோல் ஹார்மோனிய பெட்டியுடன் வந்தவர் பல்வேறு இசை கருவிகளை கற்றுக்கொண்டார். இளையராஜா 1976களில் தொடங்கி தற்போது வரை எத்தனை பாடல்கள் இசையமைத்தார் என்பதை எண்ணவே முடியாது. இளையராஜாவுக்கு இசைஞானி என்று கலைஞர் கருணாநிதி தான் பட்டம் கொடுத்தார்.
இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படும் நிலையில், அந்த காலத்தில் மதுரையில் இருந்து சென்னைக்கு இளையராஜா வந்த போது, சென்ட்ரலில் வந்த இறங்கியிருப்பதாக போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் மதுரையில் இருந்து எப்படி சென்ட்ரல் வந்திருக்க முடியும் என்றும் இப்போது தான் அப்படி வர முடியும் என்றும் பலர் தனுஷை கிண்டல் செய்து வருகிறார்கள்.
இப்போது தான் போடிநாயக்கனூரில் இருந்து மதுரை வழியாக சென்ட்ரலுக்கு ரயில் இருப்பதாகவும், அப்போது எல்லாம் மதுரையில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்திருக்க முடியாது என்பது நெட்டிசன்களின் விமர்சனமாக உள்ளது. இதை புளுசட்டை மாறன் தான் முதலில் எழுப்பினார். அது தற்போது பெரிய பேசுபொருளாகி உள்ளது. அந்த காலத்தில் சென்ட்ரலுக்கு மதுரையில் இருந்து நேரடியாக ரயில்கள் வராது என்பதால் இப்படியான விமர்சனங்கள் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications