பிடிஆர், ஆவடி நாசர் எங்க கட்சிக்கு வரக்கூட வாய்ப்பு இருக்கு.. கொளுத்தி போடும் ஜெயக்குமார்
சென்னை: பிடிஆர் மற்றும் ஆவடி நாசர் சீக்கிரம் எங்க கட்சிக்கு கூட வர வாய்ப்புகள் அதிகம் என நினைக்கிறேன். எங்கள் கட்சியில் ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் வரக்கூடிய காலங்கள் கூட இருக்கலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அமைச்சரவையில் ஒருவரை நீக்குவது மாற்றம் என்பது முதல்வரின் விருப்புரிமை. அதற்குள் நாங்கள் தலையிட விரும்பவில்லை. பிடிஆரை இலாகா மாற்றினீர்கள். இதே பிடிஆரை போல சிறந்த பொருளாதார நிபுணர் யாரும் இருக்க முடியாது.

பிடிஆரை நிதி அமைச்சராக போட்டால் தமிழகத்தில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றார்கள். இப்போ பிடிஆருக்கு திறமை இல்லையா.. இரண்டு வருடம் கழித்து இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன? இலாகா மாற்றத்தின் மூலம் ஆடியோ உண்மை என்றுதான் அர்த்தம் ஆகியுள்ளது. இதை முதல்வரே ஒப்புக்கொண்டதாகத்தான் கருதமுடியும். ஆடியோவில் இருப்பது பிடிஆரின் குரல் என்பதை முதல்வர் உறுதி படுத்தியிருக்கிறார்.
எனவே இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் முழுமையான பொறுப்பு ஆகும். இதுதான் தமிழக மக்களின் எதிர்பார்ப்புமாக உள்ளது. விளக்கம் கொடுத்த நிலையில் அவரை ஏன் டம்மியாக்க வேண்டும். கோபத்தின் அடிப்படையில் தானே இலாகாவை மாற்றியிருக்கிறார்கள். இப்போது அதுதான் மக்களின் கேள்வியாக உள்ளது.
ஆடியோ உண்மை என்றால் மத்திய அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் உண்மையை கண்டுபிடிப்போம் என்று மத்திய அரசும் எங்களிடம் சொல்லியிருக்கிறது. திமுகவை பொறுத்தவரை உதட்டில் ஒன்றும் உள்ளத்தில் ஒன்றும் வைத்துப் பேசக் கூடியவர்கள். பேசுவது போல நடைமுறையில் இருக்க மாட்டார்கள். இஸ்லாமிய மக்கள் இந்த ஆட்சியின் மீது கடும் அதிருப்தியில் இருக்கிறார்கள். இது தேர்தலில் எதிரொலிக்கும்.
திமுகவில் எவ்வளவோ உழைத்தவர்கள் இருக்கிறார்கள் அவர்களுக்கு கொடுத்து இருக்கலாம். ஆனால் வாரிசு அடிப்படையில் ஜமீன் தாரி முறையில், வழி வழியாக வருவதுதான் திமுக. ஆனால், அதிமுகவில் கொடி கட்டிய தொண்டன் கூட தேசிய கொடி கட்டிய காரில் செல்ல முடியும். எடப்பாடி பழனிசாமி இதற்கு சான்றாக இருக்கிறார்.
நான் எல்லாம் மிட்டா மிராசுதாரா.. நாங்கள் எல்லாம் ஏழை எளிய நடுத்தர சாதாரண மக்கள்தான். 2026 ஆம் ஆண்டோடு திமுகவிற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும். இனிமேல் அவர்கள் ஆட்சிக்கு வரமாட்டார்கள். பிடிஆர் எல்லாத்தையும் சொல்லிவிடுவார் என நினைக்கிறேன். கண்டிப்பாக சொல்லி விடுவார்.
சீக்கிரம் எங்க கட்சிக்கு கூட வாய்ப்புகள் அதிகம் என நினைக்கிறேன். நடக்கும் என நினைக்கிறேன். ஆவடி நாசரை அதிமுகவில் இழுக்க எதுவும் திட்டம் போட்டு இருக்கிறீர்களா என்று கேட்கிறீர்கள்.. எங்கள் கட்சியில் ஆள் பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் வரக்கூடிய காலங்கள் கூட இருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications