ஆர்எஸ்எஸ்ஸுக்கு இங்க வேலையில்லைன்னா.. உங்களுக்கு என்ன வேலை.. திருமாவுக்கு பாஜக பதிலடி
சென்னை: தமிழக அரசியலில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு என்ன வேலை என பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் இயக்கத்திற்கு வேலை இல்லை சனாதன அரசியலை தமிழகத்தில் நுழைய விட மாட்டோம் என திருமாவளவன் சொல்கிறார்.
அரசியலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வேலை இல்லை. சாதிய, பிரிவினைவாத சக்திகளை தமிழகத்தில் இருந்து ஆர் எஸ் எஸ் அகற்றும் என தனது ட்விட்டரில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

காமராஜர் நினைவு நாள்
பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மாமனிதர் காமராஜர் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழைய விட மாட்டோம் என விசிக உறுதி ஏற்கிறது.

பயங்கரவாத அணுகுமுறை
பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம்தான் ஆர் எஸ்.எஸ். அது, கலாச்சார இயக்கம் என்ற போர்வையில் இயங்கி கொண்டிருக்கிறது. சாகா என்கிற பெயரில் ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள். மக்களுக்கு தொண்டு செய்வதை விட வன்முறையை தூண்டி வருகிறது.

ஆர்எஸ்எஸ் பேரணி
ஆர்.எஸ்.எஸ். பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று, ஜனநாயக சக்திகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்தோம். ஆனால், காவல்துறை பொத்தாம் பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது.
வரும் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி, திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால் பண்படுத்தப்பட்ட மண். இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த, இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும்.

தமிழகத்தில் வேலையில்லை
தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸுக்கு வேலை இல்லை. அவர்கள் பேரணி நடத்தக்கூடாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆர் எஸ் எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க கூடாது. சட்ட ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றல் அரசுக்கு தான் உள்ளது. கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு தான் உள்ளது.

நீதிமன்றம் எச்சரிப்பது
அரசு விரும்புகிறப்படி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும். நீதி மறுக்கின்ற இடத்தில் தான், நீதிமன்றம் அதிகாரத்தை செலுத்த வேண்டும். ஒரு பாசிச வன்முறை இயக்கத்திற்கு பேரணி நடத்த, அனுமதி தர வேண்டும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என திருமாவளவன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications