வாரிசு அரசியல் விமர்சனத்திற்கு மா.சு பதிலடி.. 234 தொகுதிகளிலும் திமுக ஜெயிக்கும் என உறுதி!
சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதனை வாரிசு அரசியல் என எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் நிலையில், வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட உள்ளது. இன்று மாலை 3.30 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்க உள்ளனர். ஜாமீனில் வெளிவந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவி செழியன், ஆர் ராஜேந்திரன், ஆவடி நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்க இருக்கிறார்கள். முக்கியமாக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்க உள்ளதாக சமீப நாட்களாக தகவல் பரவி நிலையில், நேற்று இது உறுதியானது. இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சிகள் வாரிசு அரசியல் என விமர்சனம் செய்துள்ளன. இந்த விமர்சனங்களுக்கு அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். வாரிசு அரசியலில் இல்லாதவர்கள் உதயநிதி நியமனம் குறித்து கேள்வி கேட்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னது போலவே மாற்றத்தை மிக சிறப்பாக அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினிடம் அவர் போகிற இடங்களில் எல்லாம் உதயநிதி ஸ்டாலினுக்கு எப்போது துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு இருந்தனர். பொதுமக்கள் மட்டுமில்லை, திமுகவின் ஒட்டுமொத்த தொண்டர்களின் எதிர்பார்ப்பை முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு நாள் இன்று. உதயநிதி ஸ்டாலின் விளையாட்டு நலன் துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தமிழ்நாடு விளையாட்டில் சிறந்து விளங்குகிறது. அவர் பொறுப்பேற்ற பிறகு உலக அளவில் கொண்டு சென்று இருக்கிறார். விளையாட்டு துறையில் பலர் பல வகைகளில் பெருமை அடைந்துள்ளனர். 234 தொகுதிகளுக்கு 200 தொகுதிகளில் வெற்றி பெற உழைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின் சொன்னபடி தொண்டர்கள் உழைத்து வருகிறார்கள்.
ஆனால் இன்றைக்குள்ள நிலைமையை வைத்து பார்க்கும் போது எப்படி லோக்சபா தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோன்று வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக கூட்டணி 234க்கு 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று நான் சொல்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது வாரிசு அரசியல் என்று விமர்சிப்பவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் மா சுப்பிரமணியன், "யாரு எல்லாம் வாரிசு அரசியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் பேசலாம். தங்களுக்கான வாரிசுகள் யார் எல்லாம் அரசியலில் இல்லையோ அவர்கள் எல்லாம் இதை முன்னெடுத்து பேசலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications