10th results 2025 tamil nadu: 10ம் வகுப்பு மறுதேர்வு டூ 11ம் வகுப்பு அட்மிஷன் வரை.. பெயிலானவர்கள் கவனிக்க வேண்டியவை
சென்னை: 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 871239 பேரில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதியும் தேர்ச்சி பெறாத மாணவர்கள் எண்ணிக்கை 75521 ஆகும். இதுதவிர தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை 15,652 ஆகும். ஒட்டுமொத்தமாக 10ம் வகுப்பில் பெயில் ஆனவர்கள் எண்ணிக்கை 91 ஆயிரத்து 173 ஆகும். இந்த 91 ஆயிரம் மாணவர்கள் மறுதேர்வுக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும். எப்படி 11ம் வகுப்பில் சேர அட்மிஷன் பெறுவது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடந்து முடிந்தது. அதன் பின்னர் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ல் தொடங்கியது. இந்த 10ம் வகுப்பு தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 871239 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினார்கள். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 15ம் தேதி முடிந்தது. அதன் பின்னர் பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

தேர்ச்சி விகிதம்
அங்கிருந்து திருத்துதல் மையங்களுக்கு ஏப்ரல் 17-ம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 21 முதல் 30-ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற்றன. மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகள் கடந்த சில வாரங்களாக நடந்து வந்தது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் இன்று காலை வெளியாகின. இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி தேர்ச்சி விகிதம் - 93.80 சதவீதம் ஆகும். 10ம் வகுப்பில் மாணவியர் 4,17,183 (95.88 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்கள் 4,00.078 (91.74 சதவீதம்) தேர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் இந்த ஆண்டு மாணவியர் தேர்ச்சி விகிதம் 4.14 சதவீதம் அதிகரித்துள்ளது.
வேலைக்கு போக வேண்டாம்
கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இந்த முறை தேர்வி விகிதம் அதிகரித்து இருந்தாலும் சுமுர் 91 ஆயிரம் மாணவர்கள் (தேர்வு எழுதாதவர்களையும் சேர்த்து) தேர்ச்சி பெறவில்லை.. தேர்ச்சி பெறாத மாணவர்கள் கவலைப்பட தேவையில்லை.. தேர்ச்சி பெறாத மாணவர்கள், விரைவில் மறுதேர்வு எழுதி, 11ம் வகுப்பில் விரும்பிய பாடப்பிரிவினை எடுத்து சேர முடியும். அதற்கு போதிய காலஅவகாசங்கள் உள்ளன. தேர்வில் தோல்வி அடைந்ததால் கவலைப்பட வேண்டாம்..பலர் படிப்பை கைவிட்டு வேலைக்கு செல்கிறார்கள்.இது முற்றிலும் தவறு..
தவறான சகவாசம்
சற்று கவனமாக படித்தால், நிச்சயம் தேர்ச்சி பெற முடியும். துணை தேர்வில் தேர்ச்சி பெற்று வெற்றி பெற்ற பலர் இன்று மிகப்பெரிய அதிகாரிகளாக பல இடங்களில் பணியாற்றி வருகிறார்கள். படிக்கும் போது கவனச்சிதறல், தவறான நண்பர்கள் சகவாசத்தால் படிப்பில் கவனத்தை சிதறவிட்ட மாணவர்கள், இப்போது விட்ட இடத்தில் தொடங்கினால் மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது. அவர்களின் எதிர்காலம் 10ம் வகுப்புமதிப்பெண்ணை வைத்து அல்ல.. அவர்கள் அடுத்து எடுக்க போகும் முடிவினை வைத்து தான்.. எனவே புத்திசாலித்தனமாக மீண்டும் படிக்க வேண்டும் என முடிவெடுப்பவர்கள் வெற்றியாளர்கள் ஆக முடியும்.
10ம் வகுப்பு மறுதேர்வு
10 மற்றும் 11 ஆகிய வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் ஜூலை 4ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. துணைத் தேர்வுக்கு மே 22ஆம் தேதி முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் பயின்ற பள்ளிகளை அணுகி மாணவர்கள் எளிதாக துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.அதேபோல் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19ஆம் தேதி முதல் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்ச்சி பெற முடியாவிட்டால்
மாணவர்களே ஒருவேளை துணை தேர்வில் தேர்ச்சி பெற முடியாவிட்டாலும்,கவலைப்பட வேண்டாம். அக்டோபரில் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம். அதன்பிறகு அடுத்த ஆண்டில் வழக்கம் போல் 11ம் வகுப்பு சேர முடியும். ஓராண்டில் உலகில் பெரிய மாற்றம் ஏற்படாது. நிறைய பேர் 12ம் வகுப்பு முடித்து படிக்க வசதி இல்லாமல் படிப்பை இரண்டு ஆண்டுகள், மூன்று ஆண்டுகள் நிறுத்திவிட்டு மீண்டும் படித்து இன்று மிகப்பெரிய அரசு அதிகாரிகளாக இருக்கிறார்கள். பெயில் ஆன பலர் ஐஏஎஸ், ஐபிஎஸ் என்கிற அளவில் எல்லாம் உயர்ந்திருக்கிறார்கள். எனவே தன்னம்பிக்கையுடன் படியுங்கள். தவறான முடிவெடுக்க வேண்டாம்.. எல்லாமே மாறிவிடும்.












Click it and Unblock the Notifications