உடனே நிறுத்துங்க.. வெறுப்பு அரசியல்.. போலி மதசார்பின்மை.. திருமாவளவனின் ஆவேச பேச்சுக்கு பாஜக பதிலடி
விசிக திருமாவளவனின் அறிக்கைக்கு நாராயணன் திருப்பதி பதிலடி தந்துள்ளார்
சென்னை: பாப்புலர் ஃப்ரெண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐயை நசுக்குவதில் பாஜக அரசுக்கு கூடுதல் கவனம் இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.. இதையடுத்து, இவ்வாறான பெரும்பான்மை வெறுப்பு அரசியலை, போலி மத சார்பின்மை பேசும் சாதிய கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று தமிழக பாஜக காட்டமாக கூறியுள்ளது.
நாடு முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ நிர்வாகிகளின் வீடுகள், அலுவலகங்களில் என்ஐஏ சோதனை நடத்தியதோடு 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனா்.
இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.. அந்தவகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் குற்றம்சாட்டியுள்ளாா்.. இதுகுறித்து ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

எஸ்டிபிஐ
அந்த அறிக்கையில், தேசிய புலனாய்வு முகமை மற்றும் அமலாக்கத் துறை ஆகியவற்றின் மூலம் சோதனை என்னும் பெயரில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் பொறுப்பாளர்களுடைய இல்லங்கள், அலுவலகங்களில் நுழைந்து அவர்களைத் துன்புறுத்தியும் அச்சுறுத்தியும் சனாதன பாஜக அரசு ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இத்தகைய இஸ்லாமிய விரோதப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா
ஜனநாயக வழியில் வெளிப்படையாக இயங்கும் ஒரு வெகுமக்கள் இயக்கம்தான் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகள் ஆகும். இவ்வியக்கங்களின் தலைமை பொறுப்பில் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் இடம்பெற்றிருந்தாலும் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதங்களைச் சார்ந்தவர்களும் தலைமைத்துவப் பொறுப்புகளை வகிக்கின்றனர்.அதேபோல, இவ்வியக்கங்கள் இஸ்லாமியர்கள் நலன்கள் மட்டுமின்றி அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகப் பாடுபடுகிற மையநீரோட்ட அமைப்புகளே ஆகும்.

முத்திரை
ஆனால், தொடர்ந்து பாஜக ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இவ்விரு இயக்கங்களையும் குறிவைத்து, பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புள்ளதாக முத்திரை குத்தி வெகுமக்களிடமிருந்து அந்நியப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.. அகில இந்திய அளவில் கட்டுக்கோப்புடனும் கருத்தியல் வலுவுடனும் அனைத்துத் தரப்பு மக்களையும் அணிதிரட்டி வருவதால், இவ்வியக்கங்கள் ஒரு மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து விடக் கூடாதென்னும் உள்நோக்கத்தில்தான் பாஜக அரசு, இவ்வாறு இவ்வியக்கங்களை நசுக்குவதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

சங்பரிவார்
அண்மையில் நடந்த பரிசோதனைகளில் நூற்றுக்கணக்கானவர்களைக் கைது செய்துள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் இஸ்லாமியர்களுக்கு மட்டுமின்றி அனைத்துத் தரப்பு ஜனநாயக சக்திகளுக்கும் எதிரானவையாகும். எனவே, இவ்வாறான சிறுபான்மையின வெறுப்பு அரசியலைச் சனாதன சங்பரிவார் அரசு கைவிட வேண்டுமென விசிக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம் என்று தெரிவித்துள்ளர்.

கமலாலயம்
இதனிடையே திருமாவளவனுக்கு தமிழக பாஜக தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளது.. அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஜனநாயக நடவடிக்கைகளுக்கு எதிரான, அடிப்படைவாத, பயங்கரவாத தீய சக்திகளுக்கு ஆதரவான நிலைப்பாடே இது! இவ்வாறான பெரும்பான்மை வெறுப்பு அரசியலை, போலி மத சார்பின்மை பேசும் சாதிய கட்சிகள் நிறுத்த வேண்டுமென மக்களின் சார்பில் வலியுறுத்துகிறோம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ட்வீட்டுக்கு ஆதரவும், எதிர்ப்பும் என மாறி மாறி கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன..

நாராயணன் திருப்பதி
சுதந்திரம் கிடைத்த பிறகு இரண்டு முறை தடை செய்யப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ்.. இப்பொழுது நிறைய பேர் குண்டு வெடிப்பு காரணமாக சிறையில் இருந்து விட்டு வந்தவர்களும் ஆர்எஸ்எஸ் தான் மறந்து விட வேண்டாம், அவர்களே சொல்லி உள்ளார்கள் என்று கருத்துக்கள் பதிவாகி உள்ளன.. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் எதிர்க்கட்சிகள் எடுத்து வைக்கும் கருத்துக்கள், அதன் சேவைகளை கண்டு பாஜக அஞ்சுகிறது. அதனாலேயே அந்த இயக்கம் மற்றும் எதிர்க்கட்சிகளை முடக்க தன் ஏவலாளிகளான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, தேர்தல் ஆணையம் ... இன்ன பிற அமைப்புக்களை கையில் வைத்துக் கொண்டு நாட்டில் ஜனநாயகத்தை படுகொலை செய்கிறது என்றும் கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications