ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல் விசிக மேடையில் மட்டுமே! ‘யார்’ கூப்பிட்டாலும் போக கூடாது! திருமா வார்னிங்..!
சென்னை: ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்காக வீர வணக்கம் செலுத்துவது, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது விசிக மேடையில் மட்டும் தான் எனவும், பணம் கொடுத்து நடத்தும் எந்த நிகழ்வுகளிலும், பேரணிகளிலும் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்காக சென்னையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி வீட்டு அருகே நின்று கொண்டிருந்த போது ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை கொடூரமாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியது. தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் அரங்கேறி இருப்பதாக கூறப்படுகிறது. தொடர்ந்து கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது சொந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வேறு, சரணடைந்திருப்பவர்கள் வேறு என தமிழக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழந்திருக்கிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி ஆளுநரை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைக்கு நீதி வேண்டி வரும் சனிக்கிழமை 20 ஆம் தேதி மதியம் 3 மணி அளவில் சென்னை எழும்பூரில் நினைவேந்தல் பேரணி நடைபெறும் என இயக்குனர் பா.ரஞ்சித் அதிரடியாக அறிவித்துள்ளார். சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி, இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம். என அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் இறந்ததற்காக வீர வணக்கம் செலுத்துவது, நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவது விசிக மேடையில் மட்டும் தான் எனவும், பணம் கொடுத்து நடத்தும் எந்த நிகழ்வுகளிலும், பேரணிகளிலும் பங்கேற்க வேண்டாம் என அக்கட்சியினருக்கு விசிக தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்," சில அரசியல் களத்திலே கூலியை வாங்கிக் கொண்டு சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருக்கிற அரசியல் அறியாமையில் உளறுகிற அற்பர்கள் ஆம்ஸ்ட்ராங் கொலையையும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு திமுகவுக்கு என்பதை, விட விசிகவுக்கு எதிராக அவதூறுகளை பரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதனை இயக்கத் தோழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விடுதலை சிறுத்தைகளுக்கு எதிரான அவதூறுகளை பரப்புகிற நிலையில் நாம் அப்படிப்பட்ட சக்திகள் பங்கேற்க கூடிய நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்கக் கூடாது. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவது, படுகொலையை கண்டிப்பது, விடுதலை சிறுத்தைகளின் தனி நடவடிக்கையாக இருக்க வேண்டும், யாரோடும் இணைந்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
யாரும் வந்து நம்மை அழைக்கலாம், இணைந்து செய்யலாம் என்று குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அதற்கான வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் திமுகவுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் பேசிக் கொள்ளட்டும். அதனை திமுக எதிர்கொள்ளும் அதற்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால் எல்லாவற்றிலும் நம்மை இணைத்து, இழுத்து, வம்பு இழுத்து விமர்சனங்களை செய்கிறார்கள். அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது.
எந்த தலித் இயக்கத்தையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர் நிலையில் வைத்து அணுகியது இல்லை. நம்மை வேண்டுமென்றே ஏதோ சொந்த புத்தி இல்லை, சொந்த கால் இல்லை என்பதைப் போல சில அற்பர்கள் அவதூறுகள் பரப்பி இருக்கிறார்கள். இதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது. நம்மை வைத்துக்கொண்டு நம்முடன் நின்று கொண்டு திமுக கூட்டணிக்கு எதிராக திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பும் கும்பல் ஏராளம் இருக்கிறார்கள்.
எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சி தனித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தலாம். நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தலாம்.. போராட்டங்களை நடத்தலாம்.. இதனை நான் ஒரு வேண்டுகோளாக உங்களுக்கு வைத்துக் கொள்ள கடமைப்பட்டு இருக்கிறேன். இது நம்முடைய கட்சியின் தனித்துவத்தை எந்த விதத்தையும் பாதித்துவிடக்கூடாது என்ற பொறுப்புணர்வில் இந்த கருத்தை நான் வைக்கிறேன்" எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications