"திருமா கிட்ட மன்னிப்பு கேளு".. ராணுவ வீரரை மிரட்டிய விசிக மணிமாறன் சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி
செங்கல்பட்டு மாவட்ட விசிக மணிமாறனை திருமாவளவன் சஸ்பெண்ட் செய்துள்ளார்
சென்னை: கடலூர் மாவட்ட ராணுவ வீரரை அவதூறாக பேசியிருந்த, செங்கல்பட்டு மாவட்ட விசிகவின் மணிமாறன் என்பவரை திருமாவளவன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கடந்த வாரம் ஒரு வீடியோ வெளியாகி இருந்தது.. அந்த வீடியோவில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் பேசியிருந்தார்.
இவர் பட்டியலினத்தை சேர்ந்தவர்... விசிக திருமாவளவனை கண்டித்து அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தனித் தமிழ்நாடு கேட்கும் திருமாவளவனுக்கு என்னுடைய கேள்வி இதுதான்..
ஷாக்! 11ஆம் வகுப்பு மாணவிக்கு திடீர் பிரசவம்.. காரணமான “மைக்செட் மணிமாறன்”.. கொத்தாக அள்ளிய போலீஸ்.!
பிளவு
தமிழகத்தில் தனியாக நின்று ஒரு வார்டில் உங்களால் வெற்றி பெற முடியுமா? ஒரு நாடு மாதிரி தனித் தமிழ்நாடு வேண்டும் என கேட்கிறீர்கள். இதற்குதான் நாங்கள் இந்திய ஒருமைப்பாட்டையும் தேச பக்தியையும் வளர்க்க வேண்டி ராணுவத்தில் சேர்ந்துள்ளோமா, நாட்டை இரண்டாகவும் மூன்றாகவும் பிளக்கத்தானா? இருக்கும் நாட்டை ஒன்று சேர்க்கத்தான் நாங்கள் ராணுவத்தில் சேர்ந்திருக்கிறோமே தவிர நாட்டை பிரித்து பார்ப்பதற்கு கிடையாது.
தனிநாடு
உங்கள் சுயநலத்திற்காக ஒரு தனிநாடு கேட்பீர்கள். அதன் பிறகு மாவட்டத்தை பிரித்து கொடு என்பீர்கள், எந்த தைரியத்தில் தமிழகத்தை தனிநாடாக மாற்ற வேண்டும் என கேட்கிறீர்கள்? தனி தமிழகம் கேட்கும் அளவுக்கு உங்களை இவ்வளவு தூரம் பேச வைத்தது ஆட்சியாளர்களின் தவறாகும். கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீங்களா? நாட்டுப் பற்றை வளர்க்க போராடி கொண்டிருக்கும் நாங்கள் என்ன இளிச்சவாயன்களா? நீங்கள் ஒரு நாள் வீதியில் நின்று தனித்தமிழ்நாடு வேண்டும் என போராடி பாருங்கள். உங்கள் வாயால் வந்தே மாதரம் சொல்ல வைப்போம்" என்று பேசியிருந்தார்.
தப்பு தப்பு
இந்த ராணுவ வீரரை, விசிகவின் லத்தூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன் என்பவர், போன் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.. அந்த ஆடியோவும் வெளியாகி இருந்தது.. "நீ எப்படி திருமாவளவனை தரக்குறைவாக பேசலாம்? நீ பேசியது தப்பு.. திருமாவளவனிடம் மரியாதையாக மன்னிப்பு கேட்டுவிடு" என்கிறார். அதற்கு ராணுவவீரரோ, "இந்தியா- பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான்காரனின் துப்பாக்கிக்கும் பீரங்கியையும் காட்டினாலே நாங்க பயப்பட மாட்டோம். நீங்க போன் போட்டு மிரட்டினா, நாங்க என்ன பயந்துடுவோமா? நான் யாருக்கும் பயப்படமாட்டேன், மன்னிப்பும் கேட்க மாட்டேன்" என கூறியுள்ளார்.
தகாத வார்த்தை
அதற்கு அந்த வீரரை, மணிமாறன் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது. "நீ டெல்லியில் இருக்கிறாய், ஆனா உன் குடும்பம் எல்லாம் இங்கே தமிழ்நாட்டில்தானே இருக்காங்க. அவங்க உயிரோட இருக்கணும்னா மன்னிப்பு கேட்டுடு என்று மிரட்டுகிறார்.. மேலும் சில விசிக நிர்வாகிகளும் ராணுவ வீரரை ஆபாசமாக திட்டியிருந்த நிலையில், இந்த ஆடியோ சோஷியல் மீடியாவில் வேகமாக பரவியது.. ராணுவ வீரர்களையே மிரட்டும் இந்த போக்கை கண்டித்தும் மணிமாறனை கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன..
மிரட்டல்
இந்த விஷயத்தில் தமிழக பாஜக தலையிட்டது.. பாஜக நிர்வாகிகள் ராணுவ வீரரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்... மற்றொருபக்கம், சிவசேனா மாநில தலைவர் திருமுருக தினேஷ், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மற்றும் தமிழக கவர்னருக்கு சிவசேனா மனு ஒன்றினை அனுப்பியிருந்தார்.. அதில், "தேசத்தை பாதுகாக்கும் ஒப்பற்ற பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர் மற்றும் அவரின் குடும்பத்துக்கு விசிக நிர்வாகிகள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.. 'தனி தமிழ்நாடு' என்ற பேச்சை, அக்கட்சியின் தலைவரும், லோக்சபா எம்பியுமான திருமாவளவன் பேசி வருகிறார். தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராக பேசி வரும் அந்த கட்சியை தடை செய்து, அதன் சொத்துகளை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார்..
மணிமாறன்
இந்நிலையில், மணிமாறனை விசிகவில் இருந்து திருமாவளவன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். விடுதலை சிறுத்தைகள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டம் (தெற்கு) இலத்தூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் திரு. மணிமாறன் அவர்கள் கட்சியின் நன்மதிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் மூன்று மாத காலத்திற்கு அப்பொறுப்பிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார் என தெரிவித்துள்ளார். மேலும் மணிமாறன் 15 நாட்களுக்குப் பின்னர் கட்சியின் தலைமையகத்தில் ஒழுங்கு நடவடிக்கை குழுவை அணுகி தனது நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்கலாம் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.