“சனாதன சக்திகளை வீழ்த்தி.. ஜனநாயகத்தை வென்றெடுக்க உறுதியேற்போம்!” திருமாவளவன் பொங்கல் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் கொண்டாட்டத்தை சிறப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில், "நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி ஜனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம்" என விசிக எம்பி திருமாவளவன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று பழையன எரித்து போகி பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு தலைவர்கள் பொங்கல் வாழ்த்தை பகிர்ந்துக்கொண்டிருக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான திருமாவளவன் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

Thirumavalavan Pongal greetings to the Tamil people that we will win democracy

"தமிழ்நாடு மற்றும் உலகெங்கும் வாழ்கின்ற தமிழர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் பொங்கல் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொங்கல் திருவிழா தமிழ்ப் பெருங்குடி மக்களின் பூர்வீகமான பாரம்பரியமான பெருவிழாவாகும். தமிழகத்தின் வரலாற்றுப்பூர்வமான ஒரே விழா பொங்கல் திருவிழாவாகும். பழையன கழிதலும் புதிய புகுதலும் என்னும் பழமொழிக்கேற்ப போகித் திருநாள் கொண்டாடப்படுகிறது. ஆதி காலத்துத் தமிழர்கள் கவுதம புத்தரின் நினைவுநாளான இந்நாளில் போகித் திருநாளாகக் கொண்டாடி வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். பிரபஞ்சத்தின் அனைத்து ஆற்றல்களுக்கும் அடிப்படையாய் விளங்கும் சூரியனைப் போற்றி வணங்குதல் தமிழ்ச் சமூகத்தின் சிறந்த பண்பாடாகும்.

அதன் அடிப்படையில் பொங்கல் திருவிழாவான இரண்டாம் நாளில் கதிரவனுக்கு நன்றி செலுத்தும் விழாவாக அதிகாலை வேளையில் வாசலில் பொங்கல் வைத்துக் கடைப்பிடிக்கின்றனர். விவசாயிகளுக்கு உற்றத்துணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும்விதமாக மூன்றாம் நாளில் மாடுகளைக் குளிப்பாட்டி மாலை சூட்டி பொங்கல் படைத்துப் போற்றி வருகின்றனர். நான்காம் நாளில் வயது முதிர்ந்த மூத்தோரைக் கண்டுவணங்கி அவர்கள் வாழ்த்துகளைப் பெறும் நாளாகக் காணும் திருநாளாக தமிழினம் கொண்டாடி வருகிறது.

ஆண்டு முழுவதும் அவ்வப்போது பல்வேறு பண்டிகைகளைக் கொண்டாடினாலும் 'தமிழர் திருநாள்' என அழைக்கப்படும் ஒரே பண்டிகை பொங்கல் விழா மட்டுமே. புராணக் கதைகளின் பின்னணி ஏதுமில்லாமல் உழைப்பையும் உறவையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு காலம் காலமாகக் கொண்டாடப்பட்டுவரும் உன்னதத் திருவிழாவே பொங்கல் விழாவாகும்.

தமிழினத்தின் பாரம்பரியத்தை, குறிப்பாக, தமிழர்தம் வேளாண்மை நாகரிகத்தை ஊர் உலகுக்கு உரத்துச் சொல்லும் பெருமைக்குரிய பெருநாளே உழவர் திருநாள். தமிழ்ச்சமூகத்தினரால் மட்டுமே பூரிப்புப் பொங்க கொண்டாடப்படும் பெருநாள் என்றாலும், இது விவசாயப்பெருங்குடி மக்களின் விளைச்சல் திருநாளே ஆகும். அதாவது, வேளாண் தொழிலைப் போற்றும் திருவிழாவாகும்.

மனிதகுலம் வாழ்வதற்கேற்ற தட்பவெப்பத்தை அளித்து, விவசாய விளைச்சல்களுக்கு பேராதாரமாக விளங்கும் கதிரவனுக்கும், விவசாயிகளுக்கு உற்றத்துணையாய் உழைக்கும் உழவுமாடுகளுக்கும் நன்றி செலுத்தும் விழாக்களாகும்.

இப்படி உழைப்பைப் போற்றும் திருவிழாதான் தமிழர்கள் போற்றும் தமிழினத்தின் பொங்கல் திருவிழாவாகும். இந்நாளில் தமிழக மக்கள் ஓர் உறுதிமொழியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. அதாவது, நடைபெறவிருக்கிற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சாதியவாத, மதவாத, சனாதன சக்திகளை வீழ்த்தி சனநாயகத்தை வென்றெடுக்க ஒட்டுமொத்தத் தமிழர்களும் உறுதியேற்போம். இதுவே இந்த பொங்கல் திருநாளில் தமிழ்ச் சமூகத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் விடுக்கும் அறைகூவலாகும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+