"விக்ரமன்".. திருமாவளவன் இத்துடன் நிறுத்திக்கணும்.. உங்க கட்சிக்கார தம்பி".. பொங்கிய ராஜேஸ்வரி பிரியா
ராஜேஸ்வரி பிரியா விசிக திருமாவளவனுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்
சென்னை: "சூதாட்டமாக இருந்தாலும் எனது கட்சிகாரன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு சமமாகும். ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதனால் அரசியல் செய்ய முடியாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு திருமாவளவன், விளம்பரம் செய்ய தொடங்கியது வேதனை. மண், மக்கள் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுவதனை நிறுத்தி கொள்ளுங்கள்" என்று ராஜேஸ்வரி பிரியா கண்டனம் தெரிவித்துள்ளார்.
அன்று பாமகவில் இணைந்து செயல்பட்டவர் ராஜேஸ்வரி பிரியா.. அக்கட்சியின் மாநில நிர்வாகியாகவும் இருந்தவர்.. ஆனால், தேர்தலின்போது, அதிமுகவுடன் பாமக கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமகவில் இருந்து விலகினார..
பின்னர், அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற பெயரில் புதுக்கட்சியை ஆரம்பித்து, பல்வேறு செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்.. சமூக அக்கறை நிறைந்த ராஜேஸ்வரி பிரியா, இளைய சமுதாயத்துக்கு தேவையான கருத்துக்களையும் தன்னுடைய பேட்டிகள் மூலம் விடாமல் எடுத்து சொல்லி வருகிறார்..

காதல்னா
அந்தவகையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்தே கண்டித்து வருபவர் ராஜேஸ்வரி பிரியா.. பிக் பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் என்று, தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தையே நடத்தியவர்.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்த ராஜேஸ்வரி பிரியா அப்போது ஒரு பேட்டியை தந்திருந்தார்.. "நாங்களும் ரொம்ப பொறுமையா இருந்துட்டோம். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து நான் போராடி வருகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஒரு தணிக்கை குழு என்று ஒன்று கிடையாது. முதல்ல சென்சார் போர்டு தேவை. வீட்டுக்குள்ள காதல்னு எந்த மதத்தில் சொல்லி இருக்கு?

கமல் திருமா
ஒரு பையன் 4 பேரை காதலிக்கிறது எந்த வீட்டில நடக்குது? பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் டான்ஸ், பாட்டு.. இதையெல்லாம் நாங்க எதுவுமே சொல்லல. ஆனால், ரியாலிரிட்டி ஷோ-க்கு காதல் காட்சிகள் இடம் பெற தேவையில்லை. ஏனென்றால் இதை நம் குழந்தைகளுக்கு பிரிச்சு பார்க்க தெரியாது. மிகவும் ஆபாசமாக உடைகளை அணிவது நம் சமுதாயத்தை சீர்குலைக்கும். இது மேலும் பல பாலியல் வன்மங்களுக்கு காரணமாகவும் அமையும். 60 ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் இப்படி ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன.?

திருமாவளவன்
நாளை தமிழகத்திற்கு முதலமைச்சராக வர நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது. கமல்ஹாசன் அவர்களிடமே இதை நான் நேரடியாக சொன்னேன். தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தாரும் சேர்ந்து இந்நிகழ்ச்சியை எதிர்த்து போராட வேண்டும். இன்று நடந்து கொண்டிருக்கும் ஆணவ படுகொலைகள் பற்றி கமலஹாசனால் பேசமுடியுமா? இதற்கு மேல், நாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசனுக்கு எந்த தகுதியும் இல்லை. அதற்கு மேல் அவர் பேசினால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்போம்" என்று சீறியிருந்தார்.

மண் மக்கள்
இன்றும் அதே ஆவேசம் குறையாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்க்கிறார்.. அதிலும் கமலை எதிர்த்து கேட்டது போல், விசிக தலைவர் திருமாவளவனிடம் நேரடியாகவே பாய்ந்துள்ளார்.. பிக்பாஸ் போட்டியாளரான விசிகவை சேர்ந்த விக்ரமனுக்கு திருமாவளவனே ஆதரவு கேட்டு ட்வீட் போட்டிருந்தார்.. இதுவரை எந்த சீசனிலும் இப்படி நடந்ததில்லை.. பிக்பாஸ் போட்டியாளருக்கு ஒரு அரசியல் தலைவரே வாக்கு கேட்டதும் இல்லை.. பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்துவரும்நிலையில், திருமாவளவனே இப்படி செய்யலாமா? என்றும் இதற்கு கண்டனங்களும், அதிருப்திகளும் பெருகி வருகின்றன.

நிறுத்திக்குங்க
அந்தவகையில், ராஜேஸ்வரி பிரியாயும் கண்டனம் தெரிவித்துள்ளார்.. தன்னுடைய முகநூல் பதிவில், "தொல்.திருமாவளவன் அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வாக்கு சேகரிப்பது வேடிக்கையாக உள்ளது. எத்தனையோ மக்கள் பணிகள் கிடப்பில் இருக்க தேவையற்ற கலாச்சார சீர்கேட்டிற்கு வித்திடும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் உங்கள் கட்சிகார தம்பி வெற்றி பெற வாக்கு சேகரிப்பது என்பது அரசியலின் அவலம். சூதாட்டமாக இருந்தாலும் எனது கட்சிகாரன் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணுவதற்கு சமமாகும். ஆளுங்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதனால் அரசியல் செய்ய முடியாமல், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விளம்பரம் செய்ய தொடங்கியது வேதனை. மண், மக்கள் என்றெல்லாம் பேசி மக்களை ஏமாற்றுவதனை நிறுத்தி கொள்ளுங்கள்" என ஆவேசமாக கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications