ஸ்ட்ராங் ஆகும் எடப்பாடி.. கூட்டணி வலுப்பெற நல்ல சான்ஸ்.. ஜிகே வாசன் சொல்றதை பாருங்க! அப்போ அண்ணாமலை?
இந்த அறிவிப்பு கூட்டணி வலுப்பெற நல்ல சான்ஸ் என்கிறார் ஜிகே வாசன்
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அக்கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது எனவும், வரும் நாட்களில் கூட்டணி வலுப்பெறுவதற்கு இது நல்ல வாய்ப்பை கொடுக்கும் எனவும் த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதிமுக - பாஜக தலைவர்கள் மாறி மாறி கடுமையாக விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.
அதன் உச்சமாக, அதிமுக கூட்டணியில் இருந்தால் நான் மாநில தலைவர் பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசினார்.

அதிமுக பொதுச் செயலாளர்
எடப்பாடி பழனிசாமி தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக உள்ள நிலையில் அவரை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்காக அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. வேட்பு மனு தாக்கல் நேற்று காலை 10 மணிக்கு தொடங்கி இன்று 3 மணியுடன் முடிவடைந்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார். எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து யாரும் வேட்பு மனுவை தாக்கல் செய்யாததால், அவர் போட்டியிடின்றி அதிமுக பொதுச்செயலாளராக தேர்வாக இருக்கிறார்.

உத்தரவு
பொதுச் செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு சார்பில் மூன்று பேர் வழக்கு தொடுத்த நிலையில், இன்று அதனை அவசர வழக்காக விசாரித்த ஐகோர்ட், தேர்தல் நடத்த தடை இல்லை எனத் தெரிவித்ததோடு, பொதுக்குழு தீர்மான வழக்கில் தீர்ப்பு வரும் வரை தேர்தல் முடிவுகளை அறிவிக்கக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவது தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு நல்ல பலன் கொடுக்கும் என்று கூறியுள்ளார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான ஜி.கே.வாசன்.

நல்ல சான்ஸ்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், அதிமுக தேர்தல் அறிவிப்பு அந்த கட்சி தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. வரும் நாட்களில் இந்த கூட்டணி வலுப்பெறுவதற்கு நல்ல வாய்ப்பை கொடுக்கும். அகில இந்திய அளவில் பாஜக வலுவான நிலையில் இருக்கிற காரணத்தால் பெரும்பாலான மாநிலங்களில் வலுவோடு வருகிற நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்நாட்டில் தேர்தலை சந்தித்து இந்த முறை நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

உண்மை நிலையை கேட்ட மோடி
சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை ஜி.கே.வாசன் சந்தித்துப் பேசினார். சமீபத்தில் பாஜக நிர்வாகிகள் அண்ணாமலையை குற்றம்சாட்டிவிட்டு அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்ததைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியில் மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஜி.கே.வாசனிடம் பிரதமர் மோடி சந்தித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது. அடுத்த் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக விவகாரங்கள் குறித்து உண்மை நிலையை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிரதமர் மோடி ஜிகே வாசனை சந்தித்து கருத்துக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அண்ணாமலை - வாசன்
இந்தச் சந்திப்பின்போது, அண்ணாமலை அதிமுகவையும், எடப்பாடி பழனிசாமியையும் சீண்டுவது தேவையில்லாதது, இது கூட்டணிக்குள் சிக்கலைத்தான் பெரிதுபடுத்தும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பாஜக மீது நல்ல அபிப்ராயம் இல்லை என்றால், நாடாளுமன்றத் தேர்தலில் அது பாஜகவுக்கு வினையாகக் கூட மாறலாம் என்கிற ரீதியில் ஜிகே வாசன் பிரதமரிடம் கூறியுள்ளாராம், இதற்கிடையே, அதிமுக - பாஜக கூட்டணி அமைந்தால் நான் மாநில தலைவர் பதவியை விட்டே விலகுவேன் எனக் கூறினார் அண்ணாமலை. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆவது தங்கள் கூட்டணிக்கு பலன் தரும் எனப் பேசியுள்ளார் ஜி.கே.வாசன்.












Click it and Unblock the Notifications