பதவி காலம் முடிந்த பிறகும் ஆளுநர் ரவியை ஏன் மாற்றவில்லை தெரியுமா? சீமான் சொன்ன காரணம்!
சென்னை: தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பதவிக் காலம் கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்த நிலையில் தற்போது அவரது பதவி நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து ஆளுநராக அவர் நீடிப்பது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார். அவர்கள் சொல்வது படி, விருப்பப்படி கேட்டு நடப்பதால் அவரை ஆளுநர் பதவியில் இருந்து மாற்றாமல் இருந்திருக்கலாம் என்று சீமான் பதில் அளித்துள்ளார்.
தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி ஆர் என் ரவி நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னதாக ஆர் என் ரவி நாகலாந்தில் இரண்டு ஆண்டுகள் ஆளுநராக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து, தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகள் பதவி வகித்துள்ளார். நாகலாந்தில் 2 ஆண்டு, தமிழகத்தில் மூன்று ஆண்டுகள் என கடந்த ஜூலை 31 ஆம் தேதியுடன் அவரது பதவிக் காலம் முடிவடைவதாக இருந்தது.

ஆனால் அவர் தற்போது வரை தமிழகத்தின் ஆளுநராக இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டதாகவே சொல்லப்படுகிறது. பொதுவாக மாநில ஆளுநராக நியமனம் செய்யப்படுபவர் 5 ஆண்டுகள் அந்த பதவியில் இருக்கலாம். அதன்பிறகு, அடுத்த ஆளுநர் நியமிக்கப்படும் வரை அவரது பதவி நீட்டிக்கப்படலாம், அல்லது மத்திய அரசு விரும்பும் பட்சத்தில் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படலாம்.
முன்பு, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படலாம் என்றே கூறப்பட்டது. ஏனென்றால், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கடந்த மாதம் 15 ஆம் தேதி டெல்லி சென்றார். அங்கு பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, தர்மேந்திர பிரதான், கிரண் ரிஜிஜு ஆகியோரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, பிரதமர் மோடியிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் பதவி நீட்டிப்பு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் பல்வேறு மாநில ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது. இந்த அறிவிப்பில் தமிழக ஆளுநர் ஆர் என் ரவியின் பெயர் வரவில்லை. இதேபோல் தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் யார் என்பது பற்றிய அறிவிப்பும் வரவில்லை. தமிழக ஆளுநரின் பதவி நீட்டிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு சீமான் பதில் அளித்து கூறியதாவது:- ஆளுநரை யார் நியமித்தார்கள் என்று உங்களுக்கு தெரியும். அவங்க வசதிக்கு, அவர்கள் விருப்பப்படி இவர் இயங்குகிறார் என்றால் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை அல்லவா.. மாத்தி இன்னொருத்தர நியமிக்கிறதற்கு பதிலாக.. அவங்க என்ன விரும்புகிறார்களோ அதுப்படியே இவர் இயங்குவதால் ஆளுநர் ரவியின் பதவிக்காலத்தை நீட்டித்து இருக்கலாம். இவ்வாறு சீமான் கூறினார்.
முன்னதாக, ஆர் என் ரவி மீண்டும் தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட இருந்தால் அது அரசியலைமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்றும், இரண்டாவது முறையாக ஆர் என் ரவி ஆளுநராக நியமிக்கப்பட்டால் வழக்கு தொடரப்படும் என்றும் வழக்கறிஞர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.











Click it and Unblock the Notifications