முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம் பொன்னானது.. தேவ கவுடா நெகிழ்ச்சி
சென்னை: திமுகவின் மறைந்த முதுபெரும் தலைவர் முரசொலி மாறன் மத்திய அமைச்சராக இருந்த காலம், மிகவும் பொன்னான காலம், அவருடன் பகிர்ந்த நினைவுகளை மறக்க முடியாது, அவர் மிகவும் வலிமையான தலைவர் என்று முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ஹெச். டி. தேவ கவுடா பேசி இருக்கிறார்.
திராவிடர் பேரியக்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரான முரசொலி மாறனின் 86வது பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் இன்று தமிழகம் முழுக்க அவரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். இந்த நிலையில் முரசொலி மாறனின் நினைவுகளை பகிர்ந்துகொள்ளும் வகையில் இன்று காணொளி கருத்தரங்கம் நடத்தப்பட்டது.

சென்னை ஹைகோர்ட் வழக்கறிஞர் ஜெ. ரவீந்திரன் ஏற்பாட்டில் இந்த காணொளி கருத்தரங்கம் நடத்தப்பட்டது. திமுகவின் மூளையாகவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனசாட்சியாகவும் திகழ்ந்தவர் முரசொலி மாறன்.
இவரின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று நடத்தப்பட்ட கருத்தரங்கில் முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ஹெச். டி. தேவ கவுடா, உணவு மற்றும் பொது விநியோக துறை மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான், சி. பி. ஐ (ம) பொது செயலாளர். சீத்தாராம் யெச்சூரி, மக்களவை உறுப்பினர் மற்றும் மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு உரை ஆற்றினார்கள்.
இதில் பேசிய முன்னாள் பிரதமர் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவர் ஹெச். டி. தேவ கவுடா தனது உரையில், இந்த விழாவிற்கு வந்து இருக்கும் எல்லோரையும் வரவேற்கிறேன். முரசொலி மாறன் குறித்து பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 1996ல் தான் முதல்முறையாக முரசொலி மாறனை சந்தித்தேன். மத்தியில் 13 கட்சிகள் கூட்டணி அரசு அமைந்த போதுதான் நான் அவரை முதல் முறையாக சந்தித்தேன்.
விபி சிங் சென்னை வந்த போது, ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவராக நான் இருந்தேன். அப்போது சென்னையை மெட்ராஸ் என்று அழைப்பார்கள். அப்போதுதான் நான் முரசொலி மாறனை அறிந்து கொண்டேன். முரசொலி மாறன் மிகவும் வலிமையான தலைவர். வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக இருந்த போது அவர் பல சாதனைகளை புரிந்து இருக்கிறார். என்னுடைய அமைச்சரவையிலும், குஜரால் அமைச்சரவையிலும் அவர் அமைச்சராக இருந்துள்ளார்.
தனது துறையை புதிய தளத்திற்கு முரசொலி மாறன் கொண்டு சென்றவர். ஒரு முடிவு எடுத்தால் அதில் வலிமையாக இருக்க கூடிய நபர் முரசொலி மாறன். மற்ற துறைகள் இழப்பில் சென்ற போது, தனது துறையை லாபத்தில் நடத்தினார். நவரத்தின நிறுவனங்கள் என்று 9 அரசு பொதுத்துறை நிறுவனங்களை கொண்டு வந்தது இவர்தான்
ஐஓசி, ஓஎன்ஜிசி, என்டிபிசி, கோல் இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், கெயில், பிஎஸ்என்எல், மகாநதி கோல்பீல்ட் என்று அதிக லாபம் அளித்த 9 நிறுவனங்களை இவர்தான் உருவாக்கினார். இந்த நிறுவனங்கள் இந்தியாவை வேறு இடத்திற்கு கொண்டு சென்றது. இந்த நிறுவனங்கள் தற்போது தனியாரிடம் தாரை வார்க்கப்பட்டு வருகிறது.
முரசொலி மாறன் என்னுடைய அரசின் கீழ் நிறைய முக்கிய பணிகளை செய்து இருக்கிறார். தனக்கு முன்னாள் இருந்த அமைச்சர்கள் செய்த தவறுகளையும் முரசொலி மாறன் சரி செய்தார். சர்வதேச உறவில் முக்கியமான சீர் திருத்தங்களை கொண்டு வர முரசொலி மாறன் முக்கிய காரணமாக இருந்தார்.
அவரின் நினைவுகளை பகிர மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரும், அவரின் குரு கருணாநிதியும் இப்போது நம்மிடம் இல்லை. கருணாநிதி, சந்திரபாபு நாயுடு, ஜோதிபாசு, முரசொலி மாறன் ஆகியோர்தான் என்னுடைய ஆட்சிக்கு உறுதுணையாக இருந்தனர். அதன்பின் குஜ்ரால் பிரதமராக வந்தார்.
அப்போது 18 மாதங்களுக்கும் மேலாக முரசொலி மாறன் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்தார்.அவர் அமைச்சராக இருந்த காலங்கள், பொன்னான காலங்கள். பின் வாஜ்பாய் ஆட்சியின் கீழும் அவர் அமைச்சராக இருந்தார். உலக அளவில் இந்தியாவில் இருந்து தெரிந்த தலைவர்களில் முரசொலி மாறனும் ஒருவர். அவற்றின் நினைவை பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி என்று, ஹெச். டி. தேவ கவுடா பேசினார்.
திமுகவின் மூத்த உறுப்பினர் ஆர். எஸ் பாரதி, திருச்சி சிவா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications