ரூ 6000 நிவாரணம் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? யாரை அணுக வேண்டும்? முக்கிய உத்தரவு
சென்னை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 6000 நிவாரணத் தொகை கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 4 ஆம் தேதி மிக்ஜாம் புயல் தாக்கியதில் பெரும்பாலான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. சென்னையில் இந்த மழை நீர் தேங்கியதால் பொது போக்குவரத்து கடுமையாக முடங்கியது.

பல இடங்களில் முட்டிக் கால் அளவுக்கு தண்ணீர் இருந்ததால் மக்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ 6 ஆயிரம் நிவாரணம் அறிவித்துள்ளது.
இந்த ரூ 6000 பணம் நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன. இதற்கான டோக்கன் விநியோகம் நேற்று பகல் முதல் ரேஷன் கடை ஊழியர்கள் மூலம் வீடுவீடாக சென்று வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்தது.
குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து நிவாரணம் பெறலாம் என அரசு தெரிவித்துள்ளது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து வழங்கலாம். ஆதார் எண், வங்கி கணக்கு எண் உள்ளிட்டவைகளை விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்கள் ரேஷன் கடைகள் மூலமாகதான் வழங்கப்படும். விண்ணப்பத்தில் கேட்கப்பட்டுள்ள 11 கேள்விகளை பூர்த்தி செய்து வழங்கினால் ஒப்புதல் சீட்டு வழங்கப்படும். இந்த நிவாரணம் 10 நாட்களுக்குள் வழங்கப்படும். இந்த நிலையில் டோக்கன் கிடைக்காதவர்கள், ரேஷன் கடைகளில் பணம் கிடைக்காதவர்கள் கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் இருக்கும் விண்ணப்பத்தை பெற வேண்டும்.
இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் அதை பரிசீலனை செய்து பணம் கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புயல், வெள்ளத்தினால் நீரில் மூழ்கியோ, மின்சாரம் பாய்ந்தோ, சுற்றுச்சுவர் இடிந்தோ அல்லது வேறு வகையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூபாய் 4 லட்சத்திலிருந்து, 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கிடவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூபாய் 5 ஆயிரத்தினை, ரூபாய் 8 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications