மிரட்டும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மாஸ்க் கட்டாயம்.. இன்று முதல் அமல்
சென்னை: கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நீதிமன்றங்களில் மாஸ்க் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களில் மாஸ்க் அணிந்து வருவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு தினசரி உயர்ந்து வருகிறது. நேற்று கூட ஒருநாள் பாதிப்பு 514- ஆக பதிவாகியிருந்தது. கொரோனா பாதிப்பால் தற்போது உயிரிழப்பும் ஏற்படுவது அதிர்ச்சி அளித்து வருகிறது.

நேற்று கூட சென்னையை சேர்ந்த ஒருவர் கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்து இருந்தார். கொரோனா தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 3,195- ஆக உள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று கடந்த 1 ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதால், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...மருத்துவமனைகளில் தயார் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்பன போன்ற அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டு இருந்தன. கொரோனா பரிசோதனைகளையும் அதிகரிக்க அறிவுறுத்தல் விடுக்கப்பட்டு இருந்தது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் சுமார் 12 மடங்கு அதிகரித்துவிட்டது.

புதிதாகப் பரவும் ஓமின்காரன் திரிபு வைரசே தொற்று பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வரும் 17 ஆம் தேதி முதல் நீதிமன்றங்களில் மாஸ்க் கட்டாயம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிந்து வருவது இன்று முதல் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் தனபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், வழக்கறிஞர்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம். தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி கழுவ வேண்டும்.
வழக்கு பட்டியலில் இல்லாவிட்டால் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வருவதை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற அறை, நீதிபதி அறை உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்ற அறை வாயில் மற்றும் முக்கிய இடங்களில் சானிடைசர்கள் வைக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications