மும்மொழிக் கொள்கை - தமிழகத்துக்கு நிதி கிடையாது - தர்மேந்திர பிரதான் பேச்சு - தமிழக எம்பிகள் கொந்தளிப்பு
சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்க மறுப்பதால் தமிழ்நாட்டுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க முடியாது என்று மத்திய அ மைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியிருப்பதற்கு தமிழக எம்பிக்கள் சு.வெங்கடேச, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தர்மேந்திர பிரதானுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
உ.பி. மாநிலம் வாரணாசி காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், புதிய கல்வி கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்க மறுக்கிறது; இதனால் தமிழ்நாட்டுக்கான நிதியை தர முடியாது என கூறியிருந்தார்.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேச்சுக்கு தமிழக எம்பிக்கள் சு.வெங்கடேசன், தமிழச்சி பாண்டியன் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சு.வெங்கடேசன் எம்பி: "மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்?" - அமைச்சர் தர்மேந்திர பிரதான்.ஏனைய பாளையக்காரர்கள் எல்லாம் அடிபணிந்துவிட்டார்கள். நாங்களும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து ஷூவை துடைத்துக்கொடுத்தோம் நீ மட்டும் இன்னும் ஏன் உரிமையை கேட்டுக் கொண்டுள்ளாய்? என்ற கேள்வியின் தொடர்ச்சி தான் இது.
தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி: மும்மொழிக் கொள்கையைப் பின்பற்றாவிட்டால் தமிழ்நாட்டிற்கு, நிதி தரமுடியாது' என்று ஒன்றியக் கல்வி அமைச்சர் கூறியிருப்பது, இந்தியக் கூட்டாட்சித் தத்துவத்துக்கு - அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; இந்திய நாட்டின் பன்முகத் தன்மையைத் தகர்த்திடும் ஆபத்தானது. எந்த மாநிலத்தின் மீதும் எந்த மொழியையும் திணிப்பது கூடாது. ஒன்றிய அமைச்சரின் பேச்சு, கடும் கண்டனத்திற்குரியது.
சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக் கருத்துக்களோடு, இருமொழிக் கொள்கையை உயர்த்திப் பிடித்து கல்வியில், பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள் நாம். மொழி மேலாதிக்கத்தின் வடிவமாக, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில், நம்மீது இந்தியைத் திணிக்க முயன்றபோதெல்லாம் வரலாறு காணாத எதிர்ப்பைத் தமிழ்நாடு பதிவுசெய்து வந்திருக்கின்றது .
'ஓடி வந்த இந்திப் பெண்ணே ! கேள் !
நீ தேடி வந்த கோழையுள்ள நாடு இதல்லவே' என்று, தமது பள்ளிப் பருவத்திலேயே, இந்தித் திணிப்பை எதிர்த்து முழக்கமிட்ட கருணாநிதி வழியில் முதல்வர் ஸ்ட் ஆலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் மொழி உரிமையை ஒருபோதும் விட்டுத் தராது.
கனிமொழி எம்பி: ஆதிக்கம் செலுத்துகிற மொழி குயிலாகக் கூவிவந்தாலும், மயிலாக ஆடி வந்தாலும் மயங்கிடோம். அன்னைத் தமிழ் காக்க ஆவி தரவும் தயங்கிடோம். அனுதினமும் எந்தெந்த வழிகளில் இந்தியைத் திணிக்கலாம் என்று திட்டம் தீட்டிக் கொண்டிருக்கும் பாஜக அரசின் தற்போதைய ஆயுதம் NEP 2020. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான், கல்விக்கான நிதி விடுவிக்கப்படும் என்று ஒன்றிய அமைச்சரே பேசுவது வெளிப்படையான மிரட்டல். 40 லட்சம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியோடு விளையாடுவதுதான் பாஜகவின் அரசியலா? இந்த உரிமை மீறலை வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கும் செயல்களை மத்திய பாஜக அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ளாவிட்டால், தமிழ் மக்களின் போராட்ட குணத்திற்கு பதில் சொல்ல நேரிடும் என எச்சரிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications