இது என்ன ஆண்டவருக்கு வந்த சோதனை! கர்நாடகாவை போல ஆந்திராவிலும் கமலின் "Thug life" படத்திற்கு சிக்கல்?
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி வெளியாகிறது. கமலின் பேச்சு காரணமாக ஏற்கனவே தக் லைப் படத்தைத் திரையிட விடமாட்டோம் எனக் கர்நாடகாவில் போராட்டங்கள் வெடித்துள்ளது. இதற்கிடையே தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானாவில் தக் லைப் படத்திற்கு வேறு ரூபத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கமல்ஹாசன், சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா நடிப்பில் வெளியாகும் படம் தக் லைஃப். நாயகன் படத்திற்குப் பிறகு சுமார் 38 ஆண்டுகளுக்குப் பிறகு கமலும் மணிரத்னமும் இந்த படத்தில் இணைந்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

கமல் பேச்சு
அந்த நிகழ்ச்சியில் பேசிய கமல், "தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம். அதை நீங்களும் (சிவராஜ் குமார்) ஒப்புக் கொள்வார் என்றே நினைக்கிறேன்" எனப் பேசியிருந்தார். கமலின் இந்த பேச்சை வைத்து கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் பிரச்சினை செய்து வருகின்றன. தமிழில் இருந்து கன்னம் பிறந்தது என்றும் கன்னடத்தை விடத் தமிழ்தான் சிறந்தது எனக் கமல் கூறுவதை ஏற்க முடியாது எனக் கூறி கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் சர்ச்சை
இந்த விவகாரத்தில் அங்குள்ள காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளும் கமலுக்கு எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்துள்ளன. இதற்கிடையே கன்னட அமைப்பினர் தக் லைப் படத்தைத் திரையிட விட மாட்டோம் எனச் சொல்லியும் பிரச்சினை செய்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது கர்நாடகா மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானாவிலும் கமலின் தக் லைப் படத்திற்கு வேறு ரூபத்தில் சிக்கல் வந்துள்ளது.
தெலுங்கு மாநிலங்கள்
நம்ம ஊரில் பொதுவாகப் படங்களை தியேட்டர்களில் பர்சன்டேஜ் அடிப்படையிலேயே திரையிடுவார்கள். அதாவது ஒரு படத்தைத் திரையிடும்போது, அதில் வரும் குறிப்பிட்ட சதவிகித வருமானம் தியேட்டர் ஒனர்களுக்கு போய்விடும். மீதமுள்ள வருமானம் தயாரிப்பாளருக்குச் செல்லும். அதில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மட்டும் வினியோகஸ்தர் தனது கமிஷனாக எடுத்துக் கொள்வார். பொதுவாக முதல் வாரம் தியேட்டர் ஷேர் குறைவாகவும் தயாரிப்பாளர் ஷேர் அதிகமாகவும் இருக்கும். ஆனால், நாட்கள் செல்ல செல்ல தியேட்டர் ஷேர் உயரும்.. தயாரிப்பாளர்களுக்கான ஷேர் குறையும்.
சிக்கல் என்ன
அதேநேரம் நமது அண்டை மாநிலமான ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த பர்சன்டேஜ் அடிப்படை இல்லை.. அங்கு வாடகை அடிப்படையிலான முறையே பின்பற்றப்படுகிறது. அதாவது ஒரு தியேட்டரில் குறிப்பிட்ட படத்தைத் திரையிட வேண்டும் என்றால்.. அதற்கான வாடகையைச் செலுத்திடுவார்கள். டிக்கெட் விற்பனை எவ்வளவு இருந்தாலும் அந்த வாடகை தொகை மட்டுமே தியேட்டர் ஒனர்களுக்கு கிடைக்கும்.
அதாவது இன்று ஒரு படம் ரிலீஸ் ஆகிறது என்றால்.. முதல் ஏழு நாட்களுக்கு இவ்வளவு வாடகை என பேசி வினியோகஸ்தர்கள் தியேட்டர் உரிமையாளர்களுக்கு வாடகை கொடுத்துவிடுவார்கள். டிக்கெட் எவ்வளவு ரேட்டிற்கு விற்றாலும், எவ்வளவு டிக்கெட் விற்கப்பட்டாலும் தியேட்டருக்கு அந்த வாடகை தொகை மட்டுமே கிடைக்கும்.
தியேட்டர் ஸ்டிரைக்?
இருப்பினும், இந்த வாடகை முறையால் தியேட்டர் உரிமையாளர்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக ஆந்திரா, தெலுங்கானா தியேட்டர் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். குறிப்பாக சிங்கிள் ஸ்கிரீன் தியேட்டர்களின் நிலைமை இன்னுமே மோசமாக இருக்கிறதாம். இதன் காரணமாகவே அவர்கள் பர்சன்டேஜ் மாடல் வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார்கள். வரும் ஜுன் 1ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் உடன்பாடு எட்டவில்லை என்றால் தியேட்டர்களை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது. இதில் தியேட்டர் உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களும் பங்கேற்றுள்ளனர். இதில் பர்சன்டேஜ் மாடல் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஓடிடியில் படம் ரிலீஸ் ஆகும் காலத்தைத் தள்ளிப்போட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
ஆண்டவருக்கு சிக்கல்!
வரும் ஜூன் 1ம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும். ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்றால் தியேட்டர்கள் இயங்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது. தியேட்டர் சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத திரையரங்குகள் மட்டுமே செயல்படும். இதனால் ஜூன் 5ம் தேதி வெளியாகும் தக் லைப் படத்தின் கலெக்ஷனுக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications