‛ரீஃபண்ட்’.. கோயம்பேடு, தாம்பரத்தில் முன்பதிவு செய்தவர்கள் கவனத்துக்கு.. எஸ்இடிசி மேஜர் அறிவிப்பு
சென்னை: சென்னையில் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பதில் பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து பஸ் முன்பதிவு செய்தவர்களின் டிக்கெட் கட்டணம் திரும்ப வழங்கப்படும் என எஸ்இடிசி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் முக்கிய பஸ் நிலையமாக கோயம்பேடு இருந்தது. இங்கிருந்த தான் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ஒரே இடத்தில் இருந்து பஸ்கள் புறப்பட்டு சென்று வந்ததால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல், இடநெருக்கடி ஏற்பட்டது.

இதையடுத்து தான் கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வந்தது. முந்தைய அதிமுக ஆட்சியில் 2019ல் பஸ் நிலையம் கட்டும் பணி தொடங்கியது.
கொரோனாவால் பணி பாதிப்பு, கட்டுமான குளறுபடி, மழைநீர் வெளியேறாமல் தேங்கியது உள்ளிட்டவற்றால் இந்த பஸ் நிலையத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வந்தது. கடந்த பொங்கல் பண்டிகைக்கே இந்த பஸ் நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனால் அதனை செய்ய முடியவில்லை.
இறுதியாக தற்போது ரூ.400 கோடி ரூபாய் செலவில் 88 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக கிளாம்பாக்கம் பஸ் நிலையம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து பஸ் சேவைகள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கி உள்ளன.
இந்த பஸ் நிலையத்தின் சென்னையின் பல இடங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கான பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தற்போது எஸ்இடிசி எனும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து எஸ்இடிசி பஸ்கள் தென்மாவட்டங்களுக்கு புறப்பட்டு சென்றன. இதனால் 2024 ஜனவரி 30ம் தேதி வரை பொதுமக்கள் எஸ்இடிசி பஸ்களில் பயணிக்க கோயம்பேடு, தாம்பரத்தில் இருந்து முன்பதிவு செய்துள்ளனர்.
தற்போது பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு செல்ல உள்ளது. இதனால் எஸ்இடிசி பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் கிளாம்பாக்கம் பஸ் நிலையம் வந்து முன்பதிவு பஸ்களில் பயணம் செய்ய வேண்டும். இவர்களுக்கு கோயம்பேடு முதல் கிளாம்பாக்கம், தாம்பரம் முதல் கிளாம்பாக்கம் இடையிலான முன்பதிவு டிக்கெட் கட்டணம் மீண்டும் அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும்.
இருப்பினும் கூட தற்போதைய சூழலில் விழுப்புரம், கும்பகோணம், சேலம், பெங்களூரு மற்றும் ஈசிஆர் செல்லும் பஸ்கள் தொடர்ந்து கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து தான் புறப்பட்டு செல்ல உள்ளது. இந்த பஸ்கள் ஜனவரி 15ம் தேதிக்கு பிறகு கிளாம்பாக்கத்துக்கு மாற்றம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications