மதுரைக்கு டைடல் பார்க் நிச்சயம்.. விரைவில் டெண்டர் பணிகள் தொடங்கும்.. தொழில்துறை அளித்த விளக்கம்!
மதுரையில் திட்டமிட்டபடி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தொழில்துறை விளக்கமளித்துள்ளது.
சென்னை: மதுரை மாட்டுத்தாவணியில் திட்டமிட்டபடி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது. டைடல் பார்க் அமைப்பதற்கான கட்டுமான வரைபட பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் டெண்டர் பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2000- இல் அப்போதைய முதல்வா் மு.கருணாநிதி சென்னையில் திறந்து வைத்த டைடல் பார்க், தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பப் புரட்சியை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து கோவையில் டைடல் பார்க் உருவாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து திருப்பூா், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சாவூா், சேலம், வேலூா் மற்றும் உதகை ஆகிய இடங்களில் புதிய மினி டைடல் பார்க் உருவாக்கப்பட்டு வருகின்றன.

மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
இதன் தொடா்ச்சியாக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி, நிதிச் சேவை போன்ற அறிவு சாா்ந்த தொழில்களுக்கான முக்கிய மையமாக மதுரையை மாற்றும் வகையில் முன்னோடி டைடல் பார்க் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

மாட்டுத்தாவணியில் டைடல் பார்க்
இந்த பூங்கா டைடல் நிறுவனத்தால் இயக்கப்பட்டு நிா்வகிக்கப்படும். மதுரை நகரின் மையப்பகுதியான மாட்டுத்தாவணியில் இரண்டு கட்டங்களாக இந்த பூங்கா கட்டப்பட உள்ளது. முதற்கட்டமாக ரூ.600 கோடியில் 5 ஏக்கரில் இது அமைக்கப்படும் என்றும், இரண்டாம் கட்டமாக மேலும் ஐந்து ஏக்கரில் விரிவாக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆயிரம் பேருக்கு வேலை
அதுமட்டுமல்லாமல் டைடல் பார்க் மூலம் தகவல் தொழில்நுட்பம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களுக்கு தரமான உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதுடன், மதுரை மண்டலத்தின் பொருளாதார வளா்ச்சிக்கும் புதிய அங்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டைடல் பார்க் மூலம் 10,000 போ் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

ஆர்டிஐ தகவல்
இதனைத் தொடர்ந்து டைடல் பார்க் அமைப்பதற்கான இடத்தேர்வு பணிகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இந்த நிலையில் டைடல் பார்க் அமைய உள்ள இடம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என்ற தகவல் ஆர்டிஐ மூலம் வெளியாகியது. இதனால் மதுரையில் டைடல் அமைக்கும் பணிகள் தாமதமாகலாம் என்று பார்க்கப்பட்டது.

தொழில்துறை விளக்கம்
இந்த நிலையில் மதுரையில் டைடல் பார்க் திட்டமிட்டபடி அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் தொழில்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் திட்டமிட்டபடி டைடல் பார்க் அமைக்கப்படும். கட்டுமான வரைபடம் தொடர்பான பணிகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைவில் டெண்டர் விடுவதற்கான பணிகளை தொழில்துறை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications