தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையனும் என்பதே திமுக நோக்கம்.. டிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையனும் என்பதே திமுக நோக்கம். தலைவர் ஸ்டாலின் முடிவெடுத்தால் அதனை திமுக ஏற்றுக்கொள்ளும். தலைவர் முடிவு எங்கள் முடிவு. தவெக ஆட்சி அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:- திமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறோம். தவெக பெற்ற வாக்குகளுக்கும் திமுக பெற்ற வாக்குகளுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. அதனால் மக்கள் எங்களோடு இருக்கிறார்க்ள். அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

தவெக ஆட்சி அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை
காங்கிரஸ் கட்சியை 23 இடங்களில் தோற்கடித்தது யார்? இதையெல்லாம் காங்கிரஸ் கட்சி சிந்திக்க வேண்டும். இதையெல்லாம் சிந்திக்காமல் அரசியல் செய்கிறார்கள். சிந்திக்காமல் ஆதரவு கொடுக்கிறார்கள். அதனால்தான் இந்த கூட்டத்தில் கண்டன தீர்மானம். எதிர்க்கட்சி தலைவர் இந்தக் கூட்டத்தில் தேர்வு செய்யப்படவில்லை. அதிமுகவுடன் கூட்டணி என்பதை மு.க.ஸ்டாலின் மறுத்துள்ளார்.
ஸ்டாலின் மறுத்து இருக்கிறார். அவர் முடிவெடுப்பார். ஆனால் அப்படி ஒரு முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. முடிவெடுத்தால் அது திமுக ஏற்றுக்கொள்ளும். ஆனால் அந்த முடிவு இதுவரை எடுக்கவில்லை. தலைவர் முடிவு எங்கள் முடிவு. தவெக ஆட்சி அமைப்பதை நாங்கள் தடுக்கவில்லை. நாங்கள் ஆளுநரை பார்த்து இவர்கள் ஆட்சி அமைப்பதை தடுங்கள் என்றா சொன்னோம்.
அரசு கலைந்தால் யார் பொறுப்பு
ஆளுநர் எண்ணிக்கயைத்தானே கேட்கிறார். அந்த எண்ணிக்கையை காட்டினால் அனுமதிக்க போகிறார். நாங்கள் எப்படி தடுக்க முடியும். சட்டமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்று எண்ணிக்கையை காட்டினால் ஆதரவு உள்ளது என்று காட்டினால்தான் முதல்வராக ஆக முடியும். பெரும்பான்மை ஆதரவு இருக்கிறது என்று காட்டினால்தான் முதல்வராக முடியும்.
இது எல்லா மாநிலங்களிலும் காலம் காலமாக நடந்து வருகின்ற ஒன்று. ஆளுநர் என்ன நினைக்கிறார் என்று தெரியாது. அறுதிப்பெரும்பான்மையை விட எண்ணிக்கை குறைவாக இருந்து நாளையே சட்டமன்றம் முதல் கூட்டத்தொடரிலேயே அரசு கலையும் நிலை ஏற்பட்டால் யார் பொறுப்பு. அதில் நாங்கள் தலையிடவில்லை. காங்கிரஸ் தான் கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்கிறது.
பாஜக வேறு: காங்கிரஸ் வேறு
பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறார்கள். காங்கிரஸ் இதை தொடர்ச்சியாக செய்து வருகிறது. அரசியல் ரீதியாக பாஜகவை நாங்கள் வலிமையாக எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறோம். பாஜகவிற்கு எதிரான சிந்தனைகள் உள்ள கட்சிகள் எங்களோடு இருந்தால் வலிமை பெறும் என்று கருதுகிறோம். அந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியை வைத்து இருந்தோம். கொள்கை அளவில் பாஜக வேறு: காங்கிரஸ் வேறு. பாஜக ஒரு மதவாத கட்சி" இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுக - திமுக இடையே கூட்டணி ஏற்பட இருப்பதாக நேற்று இரவு முதல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல்கள் கிளம்பியது. இதனை திமுக தரப்பு மறுத்தது. ஆனாலும் அதிமுக இதுவரை மறுக்கவில்லை. புதுவையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் அதிமுக எம்.எல்.ஏக்கள் சிவி சண்முகம் தலைமையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்னொரு பக்கம் விஜய்க்கு ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைப்பு விடுக்கவில்லை.
சென்னையிலேயே இருக்க ஸ்டாலின் உத்தரவு
இத்தகைய பரபரப்பான சூழலில் டிகேஎஸ் இளங்கோவன் கருத்து மிகுந்த கவனம் பெற்றது. இன்னொரு பக்கம் திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்றும் என்ன முடிவு எடுத்தாலும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் ஸ்டாலினும் உத்தரவிட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் பரபரப்பு அடைந்துள்ளது.














Click it and Unblock the Notifications