கரூர் சம்பவம்.. இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க விஜய்.. திமுக நெத்தியடி கேள்வி
சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். கரூர் சம்பவத்தில் தன் மீது பழிபோடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் மீது தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு திமுக தரப்பில் டிகேஎஸ் இளங்கோவன் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
வேலூர் தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று பேசிய விஜய், "நாங்கள் எல்லாம் உங்கள் நண்பர்கள் என்றால் கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழியை தூக்கி போட்டீர்கள். உங்களுக்கு மனசாட்சி இருந்தால் அப்படி பேசியிருப்பீர்களா. நாங்கள் நண்பர்கள் என்றால் எதற்காக என் கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில்லை. எல்லாவற்றையும் நீங்கள் செய்துவிட்டு பொய்களை அடித்துவிடுகிறீர்கள் என்று கூறியிருந்தார் [TKS Elangovan].

ஸ்டாலின் மக்கள் பணி
இதற்கு பதில் அளிக்கும் விதமாக திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் மேயராக 5 வருடங்கள் பதவி பகித்துள்ளார். சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டி, இன்றைக்கும் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு பயன்பட்டு வருகின்றன.
5 வருடங்கள் துணை முதலமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை வழங்கியிருக்கிறார். இப்போது 5 வருடங்கள் முதலமைச்சராக இருந்து பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார். மக்கள் பிரச்சனைகள் சார்ந்து போராட்டங்களில் கலந்து கொண்டு சிறைவாசம் அனுபவித்தவர். மக்களுக்காக பலமுறை சென்றவர். அவரை எப்படி நாங்கள் இவரோடு ஒப்பிடுவது.
பாஜக காலில் கிடக்கும் விஜய்
அவர் தலைவர். தியாகம் செய்தவர். மக்களுக்கான திட்டங்களை வழங்கியவர். இவர் என்ன செய்தார் என்பதை அவர் சொல்லட்டும். விஜய்க்கு பாஜகவை பார்த்து பயம் இருக்கிறது. இன்னும் அவர் நடித்த படம் வெளியாகவில்லை. அமலாக்கத்துறை வழக்கு நிலுவையில் உள்ளது. பாஜக என்ன செய்யும் என்று நமக்கு தெரியும்.
விஜய் பாஜகவின் காலில் விழுந்து கிடக்கிறார். முதலமைச்சர் ஆகிறார் என்ற ஆசையை கடந்து மக்களுக்காக என்ன செய்தேன் என்பதை அவர் பட்டியலிடட்டும். மக்கள் அதை ஏற்றுக் கொண்டால் வாக்களிப்பார்கள். வருமானவரித்துறை தான் எங்கள் சொத்துகளை பற்றி கேட்க வேண்டும். தேர்தலுக்காக தாக்கல் செய்யும் வேட்புமனுவில் சொத்து விபரங்களை சொல்வோம்.
கரூர் சம்பவத்திற்கு பதில்
அதைப் பார்த்து தெரிந்து கொள்ளட்டும். விஜய் வருமானவரித்துறை அதிகாரியும் இல்லை. தேர்தல் அதிகாரியும் இல்லை. கரூர் விஷயதில் நாங்கள் விஜயை சிக்கவிடவில்லை. கரூர் தவெக கூட்டத்திற்கு மக்கள் வந்தனர். விஜய் நண்பகல் 12 மணியளவில் பேசுவார் என்று காலை 9 மணியில் இருந்தே மக்கள் காத்திருந்தனர். உச்சி வெயிலில் குடிக்க தண்ணீர், உணவு இல்லாமல் இரவு 7.30 மணி வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 43 மக்கள் உயிரிழந்தது இயல்பானது.
12 மணிக்கு வருவதாக சொல்லிவிட்டு ஏன் அவர் இரவு 7.30 மணிக்கு வந்தார். அதற்கான காரணத்தை இப்போது வரை அவர் ஏன் சொல்லவில்லை. மக்கள் காத்திருக்கிறார்கள் என யோசித்து சுமார் 1 மணிக்கு வந்திருந்தால் கூட பரவாயில்லை. தனக்காக மக்கள் காத்திருக்கிறார்கள் என தெரிந்து குறிப்பிட்ட நேரத்திற்கோ, சற்று முன் பின்னோ வந்து பேசியிருந்தால் மக்கள் தப்பித்திருப்பார்கள். அதை விஜய் செய்யவில்லை. அதற்கான காரணத்தையும் சொல்லவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications